லென்டோரில் உள்ள கூட்டுரிமை வீடுகளின் நீச்சல் குளத்தில் வார இறுதியில் அழையா விருந்தாளிகள். அங்கிருப்போரை அச்சத்தில் ஆழ்த்தின இரண்டு நீர்நாய்கள்.
லென்டோர் லூப்பில் உள்ள புல்லியன் பார்க் கூட்டுரிமை வீடுகளின் நீச்சல் குளத்தில் நீர்நாய்களைச் சனிக்கிழமை (ஏப்ரல் 11) இரவு கண்டதாகக் குடியிருப்பாளர் ஒருவர் ஏஷியாஒன் ஊடகத்திடம் தெரிவித்தார்.
அவரிடமிருந்த காணொளிகளில் நீர்நாய்கள் சுற்றித்திரிவதைக் காணமுடிந்தது. அவற்றில் ஒன்றைக் குடியிருப்பாளர் ஒருவர் விரட்டும் காட்சியும் அதில் இடம்பெற்றிருந்தது.
காணொளியில் துடைப்பத்துடன் துரத்திய குடியிருப்பாளரிடமிருந்து தப்பித்து நீச்சில் குளத்திற்குள் குதிக்கிறது நீர்நாய்.
குடியிருப்பாளர் தொடர்ந்து விரட்ட முயன்றாலும் நீர்நாய் நீச்சல் குளத்தில் நீந்திச் செல்வது காணொளியில் பதிவாகியிருந்தது.
மற்றொரு காணொளியில், நீர்நாய் ஒன்று, குளத்தில் மீனைக் கடித்துத் தின்கிறது.
குடியிருப்பாளர்கள் அதனைப் படம்பிடித்தனர்.
தேசியப் பூங்காக் கழகத்திடம் (என்பார்க்ஸ்) அதுபற்றிப் புகார் செய்தனர். அதன் தொடர்பிலான விசாரணை நடைபெறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
“நீர்நாய்களை நிரந்தரமாக வெளியேற்றும் வழி கண்டுபிடிக்கப்படும் என்று நம்புகிறேன். மீன்களைப் பார்ப்பதற்கும் குளத்தில் நீச்சல் அடிப்பதற்கும் பலர் விரும்புகின்றனர்,” என்று கூட்டுரிமை வீடுகளில் வசிக்கும் ஒருவர் கூறினார்.
பூங்காக் கழகத்திடமும் புல்லியன் பார்க் நிர்வாகத்திடமும் கூடுதல் விவரங்களைத் தருமாறு ஏஷியாஒன் கேட்டுள்ளது.

