ஒவ்வொரு சிங்கப்பூரர் குடும்பத்துக்கும் ஜனவரி 3 ஆம் தேதியிலிருந்து $500 மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
இதுவரை அப்பற்றுச்சீட்டுகளை 1.1 மில்லியனுக்கும் அதிகமான சிங்கப்பூரர் குடும்பங்கள் பெற்றுள்ளன எனக் கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சரும் வர்த்தக தொழில் துணை அமைச்சருமான திருவாட்டி லோ யென் லிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை 1.27 மில்லியன் சிங்கப்பூர் குடும்பங்களில் ஏறத்தாழ 88 விழுக்காடு குடும்பங்கள் என்று அரசாங்கத்தின் புதிய முயற்சியான மாபெரும் மலிவுக் கட்டண உணவு வேட்டை திட்டத்தின் அதிகாரத்துவ தொடக்க விழாவின்போது செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
பற்றுச்சீட்டுகள் கிடைக்கப்பெற்ற இரண்டு வாரங்களில் அதைப் பயன்படுத்தி $105 மில்லியனுக்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டுவிட்டதாக திருவாட்டி லோ மேலும் குறிப்பிட்டார்.
அவற்றைக் குடியிருப்புப் பேட்டை வர்த்தகங்கள், அங்காடி உணவு நிலையக் கடைகள் தீவெங்கும் உள்ள பேரங்காடிகள் ஆகியவற்றில் பயன்படுத்தலாம்.
2024ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ஒவ்வொரு சிங்கப்பூரர் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்ட $500 மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகள் அவர்களின் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க உதவியாக இருந்ததை இது காட்டுவதாக அவர் எடுத்துரைத்தார்.
மேலும், தீவெங்கும் உள்ள கடைகளுக்கும் உணவு அங்காடிகளுக்கும் இது ஊக்கத்தை அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.