நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) வளாகத்தில் ஆறு மாதங்களில் 45 வௌவால்கள் விழுந்து கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.
சில வௌவால்கள் உயிருடன் இருந்தாலும் அவற்றால் பறக்க முடியவில்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து வௌவால்கள் விழுந்து கிடந்ததை மாணவர்கள் கண்டனர்.
இவ்வாண்டு ஜனவரி மாத நடுப்பகுதியிலிருந்து பிப்ரவரி மாத நடுப்பகுதிவரை மாண்ட நிலையில் ஏழு வௌவால்களும் பறக்க முடியாத நிலையில் 15 வௌவால்களும் வளாகத்தின் வெவ்வேறு பகுதிகளில் விழுந்து கிடந்தன.
அதற்கு வளாகத்தில் அடிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிப் புகை காரணமாக இருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது.
ஆனால், அத்தகைய நடவடிக்கை எதையும் தான் மேற்கொள்ளவில்லை என்பதை என்டியு உறுதிப்படுத்தியது.
மாணவர்களுக்கான தங்கும் விடுதி 9ல் அதிக வௌவால்கள் விழுந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது.
எனவே, அருகில் நடைபெறும் ஜூரோங் வட்டார ரயில் பாதைக்கான கட்டுமானப் பணிகள் காரணமாக இருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஜாவான் பிபஸ்ட்ரெல் எனும் குறிப்பிட்ட ஒரு வகை வௌவால்கள்தான் என்டியு வளாகத்தில் விழுந்து கிடந்தன.
பூச்சிகளை அதிகம் உண்டுவாழும் அந்த வகை வௌவால், கட்டைவிரல் அளவுக்குத்தான் வளரும்.
அந்த வகை வௌவால்கள் இவ்வாறு விழுவது கவலையளிப்பதாக ‘ஏக்கர்ஸ்’ வனவிலங்கு, ஆய்வு, மீட்புக் குழு தெரிவித்தது.
வௌவால்களுக்கு ஏன் இந்த நிலை என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.