மின்வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்யச் சிங்கப்பூரில் 4,000க்கும் அதிகமான இடங்களில் சார்ஜ்+ (Charge+) நிறுவனம் மின்னூட்ட முனையங்களை வைத்துள்ளது.
2,000க்கும் அதிகமான மின்னூட்ட முனையங்கள் வீடமைப்பு குடியிருப்புப் பேட்டைகளில் உள்ளன. அதேபோல் கூட்டுரிமை வளாகங்களில் கிட்டத்தட்ட 1,700 மின்னூட்ட முனையங்கள் உள்ளன.
இந்தச் சாதனையைக் கொண்டாடும் விதமாக மார்ச் 30ஆம் தேதி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த நிகழ்ச்சியில் சார்ஜ்+ நிறுவனத்தின் தலைவர் ஓங் ஸி பூன் பேசினார். தென்கிழக்காசிய வட்டாரத்தில் மின்வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்ய முனையங்களை வைக்கும் பெரிய நிறுவனமாக சார்ஜ்+ உருவாகி வருகிறது,” என்று அவர் கூறினார்.
“2030ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் 30,000க்கும் அதிகமான மின்னூட்ட முனையங்களைப் பொருத்தத் திட்டமிட்டுள்ளோம். சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் மின் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும்,” என்றும் திரு ஓங் தெரிவித்தார்.
மின்னூட்ட முனையங்கள் அதிக அளவில் இருக்க வேண்டும் என்பதற்காக டிபிஎஸ் வங்கியும் நிதி ரீதியாக உதவிகளை வழங்கி வருகிறது.
2024ஆம் ஆண்டு பசுமை கடன் திட்டத்தின்கீழ் டிபிஎஸ் வங்கி 21 மில்லியன் டாலர் வழங்கியுள்ளது.

