சிங்கப்பூரிலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மின்சார வாகனங்களுக்கான மின்னூட்டும் மையங்கள் ஜூலை 2ஆம் தேதி முதல் ‘எஸ்பி மொபிலிட்டி’யிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
போட்டியாளரான ‘சார்ஜ்எக்கோ’ (ChargEco) நிறுவனத்தை எஸ்பி மொபிலிட்டி கைப்பற்றியதைத் தொடர்ந்து அதன்வசம் இருந்த மின்னூட்டும் மையங்கள் எஸ்பி மொபிலிட்டியின் கட்டுப்பாட்டில் வருகின்றன.
அந்த மாற்ற நடவடிக்கையின்போது சார்ஜ்எக்கோ பயனாளர்கள் தற்போது அவர்கள் பயன்படுத்தி வரும் செயலி வாயிலாகத் தொடர்ந்து அந்த மின்னூட்டும் மையங்களை அணுகலாம்.
அடுத்து வரும் மாதங்களில் மின்னூட்டும் மையங்கள் படிப்படியாக எஸ்பி மொபிலிட்டியின் கட்டமைப்புக்குள் ஒருங்கிணைக்கப்படும்.
எஸ்பி குழுமம் இந்த அறிவிப்பை வியாழக்கிழமை (ஜூலை 2) வெளியிட்டது. எஸ்பி மொபிலிட்டி என்பது எஸ்பி குழுமத்தின் ஓர் அங்கம்.
மாற்றம் நிகழ்ந்தாலும் சார்ஜ்எக்கோவின் மின்னூட்டும் மையங்களின் தோற்றத்தில் மாற்றம் இருக்காது என்று எஸ்பி குழுமத்தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார்.
எஸ்பி மொலிட்டி மற்றும் சார்ஜ்எக்கோ நிறுவனங்களில் கணக்கு வைத்திருப்போருக்கு இந்த மின்னூட்ட மைய ஒருங்கிணைப்பு பற்றி மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும் என்றும் அது பற்றிய அடுத்தடுத்த தகவல்கள் அந்நிறுவனங்களின் செயலி மற்றும் இணையத்தளங்களில் வெளியிடப்படும் என்றும் பேச்சாளர் தெரிவித்தார்.
கைமாறும் மின்னூட்ட மையங்களில் பெரும்பாலானவை, சிங்கப்பூரின் மத்திய மற்றும் வடக்கு வட்டாரங்களில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக கார்ப்பேட்டைகளில் அமைந்துள்ளன.
அந்த மையங்களில் கிட்டத்தட்ட 4 விழுக்காடு வர்த்தக மற்றும் தனியார் குடியிருப்புச் சொத்துகளில் உள்ளன.
சட்டப்படியான செலவுகள் மற்றும் எஸ்பி மொபிலிட்டியின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற காரணிகளால் ஏற்படும் செலவுகளைத் தவிர்த்து, கிழக்கு வட்டார வீவக கார்ப்பேட்டை மின்னூட்டிகளைப் பயன்படுத்துவதற்கான செலவில் 2029 மே மாதம் வரை மாற்றம் செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

