மக்கள் செயல் கட்சியின் இரும்புக் கோட்டைகளில் ஒன்றான ஜாலான் புசார் குழுத்தொகுதியை அக்கட்சி இந்த முறையும் தக்கவைத்துள்ளது.
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான திருமதி ஜோசஃபின் டியோவின் தலைமையில் ஜாலான் புசார் குழுத்தொகுதியில் போட்டியிட்ட அணி 75.21% வாக்குகளை வென்றது.
மக்கள் செயல் கட்சியை எதிர்த்து போட்டியிட்ட சீர்திருத்த மக்கள் கூட்டணி 24.79% வாக்குகளைப் பெற்றது.
2020ஆம் பொதுத் தேர்தலில் திருமதி டியோவின் தலைமையில் போட்டியிட்ட மக்கள் செயல் கட்சி அணி 65.36% வாக்குகளைப் பெற்று மக்கள் குரல் கட்சியைப் பின்னுக்குத் தள்ளியது.
நான்கு உறுப்பினர்கள் கொண்ட மக்கள் செயல் கட்சி அணியில் திருமதி டியோவுடன், திருவாட்டி டெனிஸ் புவா, திரு வான் ரிஸால் வான் ஸக்காரியா, புதுமுகம் ஷான் லோ ஆகியோர் களமிறங்கினர்.
புதுமுகமான திரு லோ, தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஹெங் சீ ஹாவ் பொறுப்பு வகித்த வாம்போ தொகுதியைப் பார்த்துக்கொள்ளவிருக்கிறார்.
சீர்திருத்த மக்கள் கூட்டணி சார்பில் திரு சியூ ஷின் கொங், திரு முஹம்மது ஹமிம் அலியாஸ், குமாரி விக்னேஸ்வரி ராமச்சந்திரன், திருவாட்டி சரினா அபு ஹாசன் ஆகியோர் போட்டியிட்டனர்.

