நீ சூனில் பிப்ரவரி 15ஆம் தேதி மக்கள் சந்திப்பின்போது மக்கள் செயல் கட்சியின் புதிய முகமான டேனியல் லியு தலைகாட்டியது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால் அவர் தேர்தல் களத்தில் இறக்கிவிடப்படுவார் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்று அந்தக் குழுத் தொகுதியின் முதன்மை நாடாளுமன்ற உறுப்பினரான கா. சண்முகம் கூறியுள்ளார்.
இதர நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மக்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சட்ட, உள்துறை அமைச்சருமான திரு சண்முகம், எங்களுடைய பல தொண்டூழியர்களில் திரு லியுவும் ஒருவர், மக்கள் சந்திப்பின்போது கலந்துகொண்டார் என்றார்.
“யாராவது வேட்பாளராக நிறுத்தப்படுவதாக இருந்தால் அது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும். ஆனால் அவர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களில் உள்ளனர்.
“அவர்கள் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால் எங்கு நிற்பார்கள் என்பது முடிவு செய்யப்பட வேண்டும். நீ சூனில் டேனியல் லியுவைப் பார்த்ததால் அவர், அங்கு தேர்தலில் நிறுத்தப்படுவார் என்று அர்த்தம் இல்லை,” என்று திரு சண்முகம் குறிப்பிட்டார்.
பிப்ரவரி 13ஆம் தேதி மக்கள் செயல் கட்சி, எதிர்கட்சியின் வசமுள்ள அல்ஜுனிட் குழுத் தொகுதியில் பாய லேபார் மசெக கிளைத் தலைவராக திரு லியு பொறுப்பேற்பார் என்று அறிவித்தது.
நகரத் திட்டமைப்பு ஆலோசனை நிறுவனமான மோரோ ஆர்கிடெக்ட்ஸ் அண்ட் பிளானர்சின் நிர்வாக இயக்குநரான திரு லியு, 2022 முதல் நீ சூன் ஈஸ்ட் குடிமக்கள் ஆலோசனைக் குழுவின் தலைவராக இருந்து வருகிறார்.