பிள்ளைகளின் மின்னிலக்கப் பழக்க வழக்கங்கள், மனநலத் தேவைகள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு நடவடிக்கை எடுப்பத்தில் பெற்றோர் பலருக்கு அதிக நம்பிக்கை இல்லாமல் இருப்பது ஒரு கருத்தாய்வில் தெரியவந்துள்ளது.
சென்ற ஆண்டு 300க்கும் மேற்பட்ட பெற்றோரைக் கொண்டு அந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டது.
தங்கள் பிள்ளைகள் கடந்த ஆண்டில் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டதாக 57.4 விழுக்காட்டுப் பெற்றோர் தெரிவித்தனர். ஆனால், அப்பிரச்சினைகளுக்கும் இணையம் தொடர்பான காரணங்களுக்கும் ஓரளவு அல்லது நேரடித் தொடர்பிருப்பதை 17 விழுக்காட்டினர் மட்டுமே உணர்ந்ததாகத் தெரியவந்தது.
பெற்றோரில் 10ல் எழுவருக்கு, பிள்ளைகள் மனநலப் பிரச்சினைகளை அடையாளம் காணப் போதுமான நம்பிக்கை இல்லை என்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவுகள் குறிப்பிட்டுள்ளன. பிள்ளைகள் திரையைப் பார்க்கும் நேரம், வயதுக்குப் பொருந்ததாதப் பதிவுகளைப் பார்ப்பது ஆகியவற்றைக் குறைப்பதில் சவால்களை எதிர்நோக்குவதாகவும் பெரும்பாலான பெற்றோர் கூறியுள்ளனர்.


