உள்ளூரில் வளர்க்கப்படும் மாறுபட்ட பயிர்களின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு வகைசெய்யக்கூடிய பங்காளித்துவம் அமைக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் உணவைச் சிங்கப்பூர் அதிகம் சார்ந்திருப்பதைக் குறைத்து அதன் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதே இந்நடவடிக்கையின் நோக்கங்களாகும்.
தெமாசெக் உயிர் அறிவியல் ஆராய்ச்சிக் கூடம் (டிஎல்எல்) தயாரித்துள்ள, அதிக ஊட்டச்சத்து கொண்ட தக்காளி, நோய்களிலிருந்து ‘பாதுகாக்கப்படும்’ அரிசி போன்ற உணவுப்பொருள்களின் உற்பத்தியைப் பெருக்கும் வழிமுறைகளை ஆராய விமானங்களில் உணவு விநியோகச் சேவைகளை வழங்கும் சேட்ஸ் நிறுவனம் நோக்கம் கொண்டுள்ளது. அதற்கு வகைசெய்யும் பங்காளித்துவத்தில் இருதரப்பும் புதன்கிழமை (ஜூன் 24) கையெழுத்திட்டன.
இலக்கு
உள்ளூரில் விளைவிக்கப்படும் மாறுபட்ட பயிர் வகைகளை எவ்வாறு சுவையான, ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளாக உருவெடுக்கச் செய்து அவற்றை விமானப் பயணிகள், பள்ளி மாணவர்கள், தேசியச் சேவையாளர்கள் போன்றோருக்கு வழங்குவது என்பதை சேட்ஸ் ஆராய எண்ணம் கொண்டுள்ளது.
இந்த முயற்சியின் தொடர்பில் சம்பந்தப்பட்ட உணவுப் பொருள்களைக் கொண்டு சரியான உணவு வகைகளைத் தயாரித்து அவற்றைச் சந்தையில் விற்பனைக்கு விடுவது தொடர்பான ஆய்வுகளை நடத்த இந்தப் பங்காளித்துவம் வகைசெய்யும். எடுத்துக்காட்டாக, டிஎல்எல் உள்ளூரில் வளர்த்த ஜேட் பெர்ச் மீன் வகையை எவ்வாறு வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கேற்ப வெவ்வேறு கலாசார உணவு வகைகளாகப் (cuisine) படைப்பது போன்றவை ஆராயப்படலாம் என்று சேட்சின் புத்தாக்க, பொருள் வளர்ச்சிப் (innovation and product development) பிரிவுத் தலைவர் ஜீன் சின் தெரிவித்தார்.
எடுத்துக்காட்டு
டிஎல்எல் உருவாக்கிய தெமாசெக் அரிசியைக் கொண்டு தயார்செய்யப்படும் கோழிச் சோறு போன்ற உணவு வகைகளை ஊடகத்தினர் சுவைத்துப் பார்க்க புதன்கிழமை வாய்ப்பளிக்கப்பட்டது.
அவற்றில் புதிய வகை உணவு வகைகளுக்கும் வழக்கமாக உட்கொள்ளப்படும் உணவு வகையிலும் சுவையில் அதிக வித்தியாசம் இல்லாதது உணரப்பட்டது. எனினும், அரிசியைக் கொண்டு தயார்செய்யப்பட்ட சோற்றில் மாவுச் சத்து அதிகம் இருப்பது உணரப்பட்டது.
இதுபோன்ற புத்தாக்க உணவு வகைகளை விற்பனைச் சந்தைக்கு விடுவதே முக்கியச் சவாலாக இருக்கிறது என்று டிஎல்எல்லின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். அதைக் கையாளவே சேட்சுடனான பங்காளித்துவம் உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

