ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை லாரி ஒன்று, பாதசாரி ஒருவர் மீது மோதியது. இந்த விபத்தில் கடுமையாகக் காயமடைந்த பாதசாரி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருடைய வயது 57.
இது குறித்து தங்களுக்கு வெள்ளிக்கிழமை காலை 9.25 மணிக்குத் தகவல் கிடைத்தது எனவும் இந்த விபத்து ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 2க்கும் பூலிம் அவென்யூவுக்கும் இடையே இருக்கும் சாலைச் சந்திப்பில் நடந்தது எனவும் குடிமைத் தற்காப்புப் படையும் காவல் துறையும் தெரிவித்தது.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது அவர் சுயநினைவோடு தான் இருந்தார் என்றும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றும் கூறப்பட்டது.
இந்த விபத்துக் குறித்துக் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

