போக்குவரத்துக் குற்றங்களை வழக்கமாக புரிந்துவந்த முதியவரான ஓட்டுநர், வேக வரம்பைமீறி ஓட்டிய வேன் 2024ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி பாதசாரி ஒருவரை மோதியது.
அப்பர் புக்கிட் தீமாவை நோக்கிச் செல்லும் உட்லண்ட்ஸ் ரோட்டில் அன்றைய தினம் மாலை 6 மணியளவில் நடந்த விபத்தில் அந்தப் பாதசாரி படுகாயமடைந்தார். சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும் எட்டு நாள்கள் கழித்து வொங் சீ சாய் என்ற அந்த 54 வயது ஆடவர் சிகிச்சை பலனின்றி அங்கு மரணமடைந்தார்.
அச்சாலையின் வேக வரம்பு மணிக்கு 60 கிலோமீட்டர் என்று இருந்த நிலையில் டான் குவி டெக் என்ற 69 வயது வேன் ஓட்டுநர் மணிக்கு 107 கிலோமீட்டர் வேகத்தில் விபத்து நடப்பதற்கு முன்பாக வாகனத்தை ஓட்டியது விசாரணையில் நிரூபிக்கப்பட்டது.
விபத்துக்குப் பிறகு, 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குற்றவாளியான டான் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி மரணம் விளைவித்த குற்றத்தை டான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (ஜூன் 8) ஒப்புக்கொண்டார்.
வேக வரம்பை ஓட்டுநர் கடைப்பிடித்திருந்தால் பாதசாரியுடனான விபத்து முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்காலாம் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சிறைத் தண்டனை
குற்றவாளிக்கு மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும்படி அரசாங்க வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.
பலமுறை போக்குவரத்து குற்றங்களுக்கு அபாரதங்கள் செலுத்தியுள்ள டானுக்கு ஜூன் 30ஆம் தேதி நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்படும்.

