சாலையில் கைப்பேசி பயன்படுத்துவதற்கான தண்டனைகள் இருசக்கர வாகனங்களுக்கும் பொருந்தும்

சாலையில் கைப்பேசி பயன்படுத்துவதற்கான தண்டனைகள் இருசக்கர வாகனங்களுக்கும் பொருந்தும்

2 mins read
0c85037a-7a7e-41c4-820d-33b7c7a12d96
அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் பயணம் செய்தவாறே தனது கைப்பேசியைப் பயன்படுத்திய ஒரு மோட்டார்சைக்கிளோட்டி - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பில் தனது கருத்துகளையும் ஆதரவையும் வழங்கிய அசாத் ஷிராசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகச் சிங்கப்பூர் காவல்துறையின் பொது விவகாரப் பிரிவின் உதவி இயக்குநர் லின் ஸிஹாவ் கூறியுள்ளார்

அவர், “கைப்பேசி பயன்பாட்டிற்கான தண்டனைகளை மற்ற சாலைப் பயனாளர்களுக்கும் விரிவுபடுத்துவது குறித்துப் பரிசீலிக்கவும்,” என்று தலைப்பில் ஜூலை 13ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் கருத்துப் பகுதிக்கு எழுதியிருந்தார்.

வாகன ஓட்டிகளுடன் சேர்த்து, சாலையில் கைப்பேசிகளைப் பயன்படுத்துவதற்கான தண்டனைகளை சைக்கிளோட்டிகளுக்கும் மோட்டார்சைக்கிளோட்டிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று அசாத் பரிந்துரைத்தார்.

உண்மையில், தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பின்கீழ் அது நடைமுறையில் இருப்பதைத் திரு லின் தெளிவுபடுத்தினார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டப் பிரிவு 65Bஇன்கீழ், மோட்டார்சைக்கிள்கள், சைக்கிள்கள் உட்பட எந்தவொரு வாகனத்தின் ஓட்டுநரும், வாகனம் நகர்ந்து கொண்டிருக்கும்போது ஒரு கைப்பேசியைக் கையில் வைத்திருப்பதும் இயக்குவதும் குற்றம்.

அண்மையில், உள்துறை அமைச்சு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தைத் திருத்துவதற்கான திட்டங்களை அறிவித்தது. அதன்படி, ஓட்டுநர் அந்தச் சாதனத்தை இயக்குகிறாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், வாகனம் நகர்ந்து கொண்டிருக்கும்போது கைப்பேசியைக் கையில் வைத்திருப்பது குற்றமாகும்.

மேலும், கைப்பேசிகளைப் பயன்படுத்தும் நடையர்களுக்கும் தண்டனைகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அந்த வாசகர் பரிந்துரைத்தார்.

“நடையர்களின் கவனச்சிதறல் சாலையில் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற அக்கறை பற்றியும் நாங்கள் அறிந்துள்ளோம். மேலும், நடையர்கள் உட்பட அனைத்து சாலைப் பயனர்களும் விழிப்புடன் இருக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்ற அவரது கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

“பாதுகாப்பான போக்குவரத்துச் சூழலை உருவாக்குவதில் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு என்பதை எடுத்துரைக்கும் பொதுக் கல்வி முயற்சிகளைத் தொடரும் வேளையில், இந்தப் பயனுள்ள கருத்துக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்,” என்றார் காவல்துறைக் கண்காணிப்பாளருமான லின் ஸிஹாவ்.

வாகனம் ஓட்டும்போது கைப்பேசியைக் கையில் வைத்துக்கொண்டு குறுஞ்செய்தி அனுப்பியதாக அல்லது பேசியதாக பிடிபடுபவர்களுக்கு 12 தண்டனைப் புள்ளிகளும், $400 முதல் $500 வரை அபராதமும் விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்
உள்துறை அமைச்சுகைப்பேசிமோட்டார்சைக்கிள்