சிங்கப்பூர்: சைனாடவுனில் அமைந்துள்ள ‘பீப்பள்ஸ் பார்க் சென்டர்’ கட்டடம் தனது மூன்றாவது ஒட்டுமொத்த விற்பனை முயற்சிக்கான பொது ஏலத்தை வியாழக்கிழமை (ஜூலை 16) தொடங்குகிறது. இந்த முறை அதன் மதிப்பீட்டு விலை (Guide Price) $1.48 பில்லியனாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டில் $1.8 பில்லியன் விலைக்குக் கட்டடத்தை விற்க முயன்று, அது தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விற்பனையை முன்னின்று நடத்தும் ‘இஆர்ஏ ரியல்டி நெட்வொர்க்’ நிறுவனம், கட்டட உரிமையாளர்களில் 80 விழுக்காட்டினரின் ஒப்புதலைப் பெற்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
பொது ஏலத்திற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 16ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
அந்தக் கட்டடத்தில் அமைந்துள்ள மொத்தம் 701 சில்லறை விற்பனைக் கடைகளில் 545க்கான உரிமையாளர்கள் இந்தக் கூட்டு விற்பனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இது மொத்தப் பங்கு மதிப்பில் 80.5 விழுக்காடாகும்.
இயூ டோங் சென் ஸ்திரீட்டில் 124 மீட்டர் நீள முகப்பைக் கொண்டுள்ள இந்த வளாகம், சைனாடவுன் எம்ஆர்டி நிலையத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. 95,467 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்த வளாகத்தில், 13 மாடிகளும் 30 மாடிகளும் கொண்ட இரு கட்டடத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் 324 சில்லறை விற்பனைக் கடைகள், 256 அலுவலக இடங்கள், 120 அடுக்குமாடிக் குடியிருப்புகள், பல மாடி வாகன நிறுத்துமிடம் ஆகியவை அமைந்துள்ளன.
ஒட்டுமொத்த விற்பனையை அடுத்து, கட்டடத்தின் வகை, அளவு, பங்கு ஆகியவற்றின் அடிப்படையில் உரிமையாளர்களுக்குத் தொகை கிடைக்கும் என்று கூறப்பட்டது.
தற்போதைய $1.48 பில்லியன் விலை மதிப்பின்படி, நிலத்தின் விலை ஒரு சதுர அடிக்கு $2,455 ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் எஞ்சியிருக்கும் குத்தகைக் காலத்தை மீண்டும் 99 ஆண்டுகளுக்குப் புதுப்பிப்பதற்கான அரசாங்கக் கட்டணமான $535.4 மில்லியனும் அடங்கும்.
இந்த வளாகம் மறுசீரமைக்கப்படும்போது, 60 விழுக்காடு வர்த்தகப் பயன்பாட்டிற்கும், 40 விழுக்காடு குடியிருப்புப் பயன்பாட்டிற்கும் மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் அனுமதி அவசியம்.

