டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து செல்லுபடியான மறுநுழைவு அனுமதி இல்லாமல் சிங்கப்பூரிலிருந்து பிற நாடுகளுக்குச் செல்லும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள், புதிய மறுநுழைவு அனுமதிக்கு விண்ணப்பம் செய்ய ஆறுமாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.
அவ்வாறு செய்யத் தவறினால் அவர்களது நிரந்தரவாசம் ரத்து செய்யப்படும்.
தற்போதைய நிலவரப்படி, செல்லுபடியான மறுநுழைவு அனுமதியின்றி வெளிநாடு செல்லும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் தங்கள் நிரந்தரவாசத்தை இழக்கின்றனர்.
தங்கள் மறுநுழைவு அனுமதி காலாவதி ஆனதும் மீண்டும் அதற்கு விண்ணப்பம் செய்து நிரந்தரவாசத் தகுதியைப் பெற அவர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.
தகுந்த காரணங்கள் இருந்தால் மறுநுழைவு அனுமதி காலாவதியான பிறகும் அதை மீண்டும் செல்லுபடியானதாக்க குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் இதுநாள் வரை அனுமதி வழங்கி வந்துள்ளது.
உதாரணத்துக்கு, வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கு இது பொருந்தும் என்று உள்துறை அமைச்சு திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 29) கூறியது.
சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கு இரு வகை அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
நிரந்தரவாசத்தை முதன்முதலாகப் பெறும்போது அவர்களுக்கு நுழைவு அனுமதி வழங்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பிட்ட காலத்துக்கு செல்லுபடியாகும் மறுநுழைவு அனுமதியும் அவர்களுக்குத் தரப்படுகிறது.
இதைக் கொண்டு அவர்கள் சிங்கப்பூரிலிருந்து தற்காலிகமாக வெளியேறி மற்ற நாடுகளுக்குச் சென்று, பிறகு மீண்டும் சிங்கப்பூர் திரும்பலாம்.
நிரந்தரவாசம் காலாவதி அடைவதில்லை என்றபோதிலும் மறுநுழைவு அனுமதி ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியானதாக இருக்கும்.
இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து செல்லுபடியான மறுநுழைவு அனுமதி இல்லாமல் வெளிநாட்டில் இருக்கும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்குப் புதிய மறுநுழைவு அனுமதிக்கு விண்ணப்பம் செய்ய 180 நாள்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த 180 நாள்கள் கால அவகாசம் டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து அல்லது மறுநுழைவு அனுமதி இன்றி சிங்கப்பூர் நிரந்தரவாசி வெளிநாட்டில் இருக்கும் முதல் நாளிலிருந்து தொடங்கும்.