மின் சிகரெட்டுகளையும் வெப்பத்தைக் கொண்டு பயன்படுத்தப்படும் தடைசெய்யப்பட்ட புகையிலை வகையையும் வாகனத்தில் கடத்திய குற்றத்துக்கு டான் வெய் ஹாவ் என்ற 29 வயது ஆடவருக்கு ஒரு வாரச் சிறைத் தண்டனை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) விதிக்கப்பட்டது.
கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஜோகூரிலிருந்து சிங்கப்பூருக்கு வாகனத்தில் காலை ஆறு மணியளவில் திரும்பியபோது டான் பிடிபட்டார். அவரிடம் 20 மின்சிகரெட்டுகளும் 6,200 புகையிலைக் குச்சிகளும் கண்டெடுக்கப்பட்டன.
அன்றைய தினம் அதிகாலை நான்கு மணியளவில் ஜோகூருக்குள் சென்று அங்கிருந்த கடைகளில் அந்த மின்சிகரெட்டுகளையும் புகையிலைப் பொருள்களையும் தமது சொந்த பயன்பாட்டுக்காக வாங்கியதாக அவர் விசாரணையில் தெரிவித்திருந்தார். அத்தகைய பொருள்களைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவருவது குற்றம் என்பதை அறிந்தே அவர் அக்குற்றத்தைச் செய்தார் என்று அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.
வாகனத்தில் இருந்த அவசரநிலையில் பயன்படுத்தப்படும் கூடுதல் சக்கரம் (ஸ்பேர் டையர்) இருக்கும் பகுதிக்குள்ளே அவர் அந்தப் பொருள்களை மறைத்து வைத்திருந்தார்.
‘ஹீட்ஸ்டிக்’ என்று அழைக்கப்படும் அந்தப் புகையிலைக் குச்சிகளைக் கடத்திய குற்றம் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டது. கடந்த 2025ஆம் ஆண்டில் அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
ஜோகூரில் ஏறத்தாழ S$861 (RM3,000 ரிங்கிட்) செலவுசெய்து டான் அப்பொருள்களை வாங்கியது நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டது.

