புக்கிட் பாத்தோக்கில் போக்குவரத்தின் எதிர்த்திசையில் வாகனம் ஓட்டியது கார் கேமராவில் பதிவானதை அடுத்து, 46 வயது ஆண் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் ஏப்ரல் 17ஆம் தேதி, மாலை மணி 4.20க்கு, புக்கிட் பாத்தோக் ரோட்டிலிருந்து ஜூரோங் டவுன் ஹால் ரோட்டை நோக்கிச் செல்லும் வழியில் நிகழ்ந்தது.
எஸ்ஜி ரோட் விஜிலான்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட இந்தச் சம்பவத்தின் கார் கேமரா காணொளியில், கறுப்பு பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார், இரண்டாம் வலப்புறப் பாதையில் போக்குவரத்தின் எதிர்த்திசையில் செல்வது தெரிகிறது.
தீவு விரைவுச்சாலையை நோக்கிய வலப்புறப் பாதையில், வாகனங்கள் வரிசையாக நிற்பது காணப்பட்டது. அந்த பிஎம்டபிள்யூ கார் கடந்துசென்றபோது, பல வாகனங்கள் சிறிது நேரம் நிற்பதும் தெரிகிறது.
அந்த பிஎம்டபிள்யூ கார் எப்படி இந்த நிலைக்கு வந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சம்பவம் தொடர்பாக 46 வயது ஆண் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஏஷியாஒன் செய்தித் தளத்திடம் காவல்துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்தின் எதிர்த்திசையில் வாகனம் ஓட்டுவது, அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுதல் என்ற குற்றமாக வகுக்கப்பட்டுள்ளது.
அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும் ஓராண்டு வரை ஓட்டுநர் உரிமம் ரத்துச் செய்யப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

