கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டுவரையில் பற்பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஆடவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்மீது சுமத்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதால் சூன் யொங் சாவ் என்ற 28 வயது ஆடவருக்கு வியாழக்கிழமை (ஜனவரி 22) ஏழு மாதச் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அவருக்கு $4,600 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அவரது குற்றச் செயல்களில் 16,000க்கும் மேற்பட்ட மின்சிகரெட்டுகளை வைத்திருந்ததோடு, தனது தாயாரை கூர்வாளைக் கொண்டு மிரட்டியதும் அடங்கும்.
போக்குவரத்துக் குற்றங்கள் உள்பட அவர்மீது உள்ள 11 குற்றச்சாட்டுகளும் தீர்ப்பு வழங்கும்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
கடந்த 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி 22ஆம் தேதி அவருக்கும் அவரது தாயாருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.
கார் வாடகைப் பணத்தைத் தந்து உதவ தாய் மறுத்துவிட்டதால் அந்த ஆடவர் ஜப்பானிய சாமுராய் வாள் என்று அழைக்கப்படும் ‘கட்டானா’ கூர்வாளை எடுத்துவந்து தாயாரை மிரட்டியுள்ளார்.
ஒரு சரக்குக் கிடங்கில் கடந்த 2021ஆம் ஆண்டு, வாடகைக்கு ஓர் அறையை எடுத்து அதனுள் மின்சிகரெட்டுகளை சூன் பதுக்கிவைத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அதே ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி கிடங்கின் உரிமையாளர் கொடுத்த தகவலின்படி சுகாதார அறிவியல் ஆணையம் சோதனைகள் நடத்தியதில் அந்த மின்சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றை சூன் ஜனவரி மாதம் முதல் விற்பனை செய்வதற்கு அவர் தம்வசம் வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

