செம்ப்கார்ப் மரின் நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தில் உள்ள கழிவறை ஒன்றில், ஆடவர் நால்வரை ரகசியமாகக் காணொளி எடுத்ததற்காக 26 வயது ஜாதவரம் ராகவன் என்பவருக்கு திங்கட்கிழமையன்று (மே 11) ஆறு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மலேசியரான அவர், அக்காணொளிகளை ஒரு மாத காலத்திற்குள் வெவ்வேறு தருணங்களில் பதிவு செய்ததாகக் கூறப்பட்டது.
ஜாதவரம், இவ்வாண்டு (2026) ஜனவரி 26ஆம் தேதி, கழிவறை ஒன்றில் நுழைந்து, அவ்வறையில் இருந்த ஒருவரைப் படம்பிடிக்கத் தனது திறன்பேசியைப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
சுவருக்கு மேல் திறன்பேசி இருப்பதைக் கவனித்த அவர் சத்தம் போட்டதால், குற்றவாளி அங்கிருந்து ஓடிவிட்டார். பின்னர் அந்த வளாகத்தின் உணவகத்தில் ஜாதவரத்தைப் பார்த்த அவர் திறன்பேசியைத் தன்னிடம் தரும்படி கேட்டார்.
அதைச் சோதனையிட்டதில் வேறு சில ஆடவர்கள் கழிவறையைப் பயன்படுத்தும் காணொளிகள் இருப்பதும் தெரியவந்தன. அவை அனைத்தும் இவ்வாண்டு ஜனவரி மாதம் எடுக்கப்பட்டன.
ஜனவரி 26ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஜாதவரம், அடுத்தவரின் ஒப்புதலின்றித் தனிப்பட்ட செயல்களைப் பதிவு செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

