மூன்றாம் கட்டத் தளர்வு நடவடிக்கைகளிலிருந்து சிங்கப்பூர் இப்போதைக்கு வெளியேறும் என எதிர்பார்க்க முடியாது என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.
“எதிர்காலத்தில் ஏற்படும் உத்தேச கிருமிப் பரவலைத் தடுப்பதற்கு தடுப்பூசிகளால் முடியும் என்ற வலுவான ஆதாரம் கிடைக்கும் வரை மூன்றாம் கட்டத் தளர்வு என்பது இப்போதைக்கு ‘புதிய வழக்கமாக’ நீடிக்கும்.
“மேலும் நம் நாட்டின் மக்கள் தொகையில் குறிப்பிட்ட எண்ணிக்கையினர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும். உலக நாடுகளில் கொரோனா கிருமித்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும்,” என்றும் டாக்டர் ஜனில் நேற்று நாடாளுமன்றத்தில் விளக்கினார்.
“கொரோனா கிருமியின் வீரியம் சிங்கப்பூரிலும் உலகம் முழுவதிலும் இன்னும் தொடர்கிறது. இங்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகள் நம்மைப் பாதுகாக்கும் ஆற்றல் பெற்றுள்ளன என்ற நம்பிக்கையை நமக்கு ஏற்படுத்தியுள்ளது. அது எதிர்கால கிருமிப் பரவலையும் தடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளது என்று கூறும் சான்றுகளுக்கு அமைப்புகள் காத்திருக்கின்றன.
“அதனை அடைய மிகச் சிறந்த உத்தியாக, உருமாறும் கொரோனா கிருமிக்கு எதிரான ஆற்றல்களையும் நாங்கள் அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம். இதற்கிடையே, பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளைக் கட்டொழுங்குடன் கடைப்பிடித்தல், நமது மக்கள் தொகையில் உயர்ந்த எண்ணிக்கையினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல், நமது ஒட்டுமொத்த எதிர்ப்புச் சக்தியைப் பலப்படுத்துதல் ஆகியவையே தற்போது சிறந்த வழி,” என்றும் அமைச்சர் விவரித்தார்.
இயோ சூ காங் தனித்தொகுதி உறுப்பினர் திரு யிப் ஹோன் வெங் கேட்ட கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய டாக்டர் ஜனில், “மூன்றாம் கட்ட தளர்வின்போதும், தொடர்பில்லாத சம்பவங்கள், சமூகக் கிருமித்தொற்றுக் குழுமங்கள் ஆகியவற்றால் சிங்கப்பூர் தனது பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளைக் கடுமையாக்கி உள்ளது.
“பொருளியலும் சமூகமும் மீண்டும் பாதுகாப்பாகத் திறப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்து அதற்கான வழிகளை ஆராயும். ஆனால், இங்கும் உலகெங்கிலும் நிலவும் மாறிவரும் சூழலால் நாம் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளை அவ்வப்போது மாற்றிக்கொண்டிருக்க வேண்டும்,” என்றார்.
ஒருவேளை சீனாவின் ‘சினோவெக்’ தடுப்பூசி சிங்கப்பூருக்கு வந்து, அது பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டால், அது நாட்டின் தடுப்பூசி போடும் திட்டத்தை மேலும் துரிதமாக்கும் சாத்தியம் உள்ளதா என்று திரு யிப் வினவினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர், “தடுப்பூசி திட்டத்தை துரிதமாக்குதல் பல்வேறு அம்சங்களைப் பொறுத்துள்ளது. அதில் மிக முகக்கியமானது, தடுப்பூசி மருந்தின் கொள்ளளவை போதுமான அளவுக்கு கையகப்படுத்துதல், தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த போதுமான எண்ணிக்கையில் தடுப்பூசி நிலையங்களை உருவாக்குதல், தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் முன்வருதல், தடுப்பூசியின் விநியோகம் ஆகியவை இதர அம்சங்கள்,” என்றார்.
பாட்டாளிக் கட்சியின் செங்காங் குழுத் தொகுதி உறுப்பினர் டாக்டர் ஜேமஸ் லிம், கிருமியில் உருமாற்றம் அதிகரித்தால் அதனை எதிர்கொள்ள சுகாதார அமைச்சு எப்படிப்பட்ட திட்டங்களை வைத்துள்ளது என்று கேட்டார்.
“கிருமித் தொற்றைத் தவிர்க்கும் அணுகுமுறைகளில் சிங்கப்பூருக்கு பொதுவான அடிப்படை நடை முறைகள் உள்ளன. அப்படிப்பட்ட நிலைமை வரும்போது அதை முறை யாக எதிர்கொள்வோம். பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள், தொடர்புத் தடமறிதல், தனிமைப்படுத்தல் ஆகியவை அவற்றுள் அடங்கும்,” என்றும் டாக்டர் ஜனில் தெரிவித்தார்.