எட்டுப் பேர் வரை ஒரு குழுவில் இடம்பெறவும் வீடுகளில் வரவேற்கவும் அனுமதிக்கப்படலாம் .
சமூகத்தில் கொவிட்-19 தொற்று தொடர்ந்து குறைவாக இருக்கும் பட்சத்தில் இவ்வாண்டு இறுதியில் சிங்கப்பூரில் மூன்றாம் கட்டத் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று கொவிட்-19 தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு தெரிவித்துள்ளது.
அப்படி மூன்றாம் கட்டத் தளர்வுகள் அறிவிக்கப்படும் பட்சத்தில், வீடுகளுக்கு வெளியே ஒன்றுகூடும் குழுக்களில் இடம்பெறுவோரின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து எட்டாக அதிகரிக்கப்படலாம். அதேபோல், வீடுகளிலும் எட்டுப் பேர் வரை வரவேற்க அனுமதிக்கப்படலாம். அத்துடன், அரும்பொருளகம், வழிபாட்டுத் தலங்கள், திருமண வரவேற்பு போன்றவற்றிலும் அதிகமானோர் அனுமதிக்கப்படலாம். ஆனாலும் மூன்றாம் கட்டத் திறப்பில் அடியெடுத்து வைப்பதற்கு, கொரோனாவிற்கு எதிரான தனது பிடியை சிங்கப்பூர் தொடர்ந்திட வேண்டும் என்றும் பல முக்கிய நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும் என்றும் பணிக்குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரும் கல்வி அமைச்சருமான திரு லாரன்ஸ் வோங் கூறினார்.
முதலாவதாக, சிறிய அளவிலான குழுக்கள், பாதுகாப்பு இடைவெளி, சமூகப் பொறுப்புடன் இருத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை சிங்கப்பூரர்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அடுத்ததாக, அதிகமான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்க ஏதுவாக பெரிய அளவில் கொரோனா தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். முதற்கட்டமாக, நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்கப்படுமுன் பங்கேற்பாளர்களைக் கிருமித்தொற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தும் முன்னோட்ட முயற்சி இடம்பெறும்.
குறைவான துல்லியத்தன்மை கொண்ட விரைவுப் பரிசோதனை முறைகள் அத்தகைய நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும். அந்த முன்னோட்ட முயற்சி வெற்றி பெற்றால், அது மேலும் மெருகூட்டப்பட்டு விரிவுபடுத்தப்படும். உள்ளூரிலும் உலகளவிலும் நிலவும் சூழலைப் பொறுத்து, இந்த நடவடிக்கைகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பணிக்குழுவின் இன்னொரு இணைத்தலைவரும் சுகாதார அமைச்சருமான கான் கிம் யோங் கூறினார்.
இருப்பினும், மதுக்கூடங்கள், கரவோக்கே நிலையங்கள், இரவு நேரக் கேளிக்கை விடுதிகள் போன்றவை கிருமித்தொற்று அபாயம் அதிகமுள்ள பகுதிகளாகக் கருதப்படுகின்றன. ஆகையால், மூன்றாம் கட்டத் தளர்வுகளின் தொடக்கத்தில் அவை மூடப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரின் இப்போதைய கிருமித்தொற்றுச் சூழல், முழுதும் அணைந்துவிடாத தீயைப் போல, நீறு பூத்த நெருப்பாக இருப்பதாக அமைச்சர் கான் குறிப்பிட்டார். ஒவ்வொரு விதித் தளர்வும் அதற்கு எண்ணெய் இடுவது போன்றது என்றும் அதனால் கிருமிப் பரவலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும் அவர் சொன்னார். கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தும்போது, பரிசோதனைகள், தடமறிதலை அதிகப்படுத்துவது எனக் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வது முக்கியம் என்றார் திரு கான்.
“எப்போது இந்த நடவடிக்கைகள் இடம்பெறும் என்பதே பெரிய கேள்வி. உண்மையில் அது நம் அனைவரின் நடவடிக்கைகளையும் பொறுத்தே உள்ளது என்பதே அதற்கான விடை,” என்று அமைச்சர் வோங் கூறினார்.
புதிய கிருமித்தொற்றுக் குழுமங்கள் தோன்றினால், மூன்றாம் கட்டத் தளர்வு தள்ளிப்போகலாம் என்றும் அவர் சொன்னார். உலகின் பல நாடுகளிலும் கிருமித்தொற்று அதிகரித்து வருவதால் அதற்கெதிரான போர் இப்போதைக்கு ஓயாது என்றார் அவர். சிங்கப்பூரில் மூன்றாம் கட்டத் தளர்வுகள் அறிவிக்கப்படுவது வெற்றிக்கான பிரகடனம் இல்லை என்றும் அது ஒரு மைல்கல் என்றும் அமைச்சர் கான் குறிப்பிட்டார்.
டிரேஸ்டுகெதர் கட்டாயமாகிறது
இவ்வாண்டு டிசம்பர் மாத இறுதிக்குள், உணவகங்கள், வேலையிடங்கள், பள்ளிகள், கடைத்தொகுதிகள் என பலரும் வந்து செல்லும் இடங்கள் அனைத்திலும் டிரேஸ்டுகெதர் செயலி அல்லது வில்லையைப் பயன்படுத்தி நுழைவது கட்டாயமாக்கப்படும். அதன் பின் கைபேசியைக் கொண்டு சேஃப்என்ட்ரி கியூஆர் குறியீட்டை அல்லது அடையாள அட்டையில் உள்ள பட்டைக் குறியீட்டை வருடுவதன் மூலம் அல்லது சிங்பாஸ் கைபேசிச் செயலி மூலம் அவ்விடங்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப் படும்.