டிபிஎஸ் வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பியூஷ் குப்தா, கெப்பல் குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் அந்தப் பொறுப்பை ஏப்ரல் 17 முதல் ஏற்பார் என்று கெப்பல் குழுமம் வியாழக்கிழமை (பிப்ரவரி 5) அறிவித்துள்ளது. அன்றைய தினம் வருடாந்தரப் பொதுக்கூட்டத்திற்கு குழுமம் ஏற்பாடு செய்துள்ளது.
தற்போது கெப்பல் தலைவராக உள்ள டேனி டியோ, 70, ஓய்வுபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திரு குப்தா, 66, இதற்கு முன்னர் கெப்பலின் துணைத் தலைவராகவும் அதன் சுயேச்சை இயக்குநராகவும் 2025 ஜூலையில் நியமிக்கப்பட்டார். கெப்பலின் சில குழுக்களிலும் அவர் உறுப்பினராக உள்ளார். அந்தப் பொறுப்புகளில் அவர் நீடிப்பார் என்றும் கெப்பல் தற்போது அறிவித்துள்ளது.
2025 ஜூலையில் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றது முதல் கெப்பலின் உத்தியைக் கூர்மைப்படுத்துவதிலும் செயல்படுத்துவதிலும் மதிப்புமிக்க ஆலோசனைகளை திரு குப்தா வழங்கியுள்ளதாக கெப்பல் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லோ சின் ஹுவா கூறியுள்ளார்.
திரு குப்தா 2009ஆம் ஆண்டு முதல் 2025 மார்ச் வரை டிபிஎஸ் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக, ஏறத்தாழ 15 ஆண்டுகள் பணியாற்றினார். அவரது தலைமைத்துவத்தின்கீழ் டிபிஎஸ் வங்கியின் பங்குகள் கிட்டத்தட்ட 270 விழுக்காடு உயர்வு கண்டன.
வங்கியின் மின்னிலக்க உருமாற்றத்தையும் கட்டமைப்பு மாற்றங்களையும் திரு குப்தா வழிநடத்தினார்.
தெமாசெக் இந்தியாவின் தலைவராகவும் ஆலோசகராகவும் கடந்த டிசம்பர் மாதம் அவர் நியமிக்கப்பட்டார்.

