ஆசியான் தலைநகர்களுக்கு அறிமுகப் பயணங்களின் ஒரு பகுதியாக, முன்கூட்டியே கோலாலம்பூருக்குப் பயணம் மேற்கொள்ள பிரதமர் லாரன்ஸ் வோங் திட்டமிடுகிறார்.
மலேசிய வெளியுறவு அமைச்சர் முகம்மது ஹசான் உடனான சந்திப்புக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (மே 28) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் பிரதமர் வோங் இதனைத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வளர்க்க தங்களது கடப்பாட்டை இரு தலைவர்களும் மறுஉறுதிப்படுத்தினர்.
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக மே 15ஆம் தேதி திரு வோங் பதவியேற்ற பிறகு, வருடாந்திர சிங்கப்பூர்-மலேசிய தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்புக்கு முன்னர் மலேசியாவுக்கு வருகை அளிக்குமாறு அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம், பிரதமர் வோங்கிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அவரது அழைப்பை ஏற்க தாம் மகிழ்ச்சி கொள்வதாக பிரதமர் வோங் கூறினார்.
2025ல் ஆசியானுக்குத் தலைமை தாங்கும் மலேசியாவுடன் அணுக்கமாகப் பணியாற்ற சிங்கப்பூர் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.
இஸ்தானாவில் திரு ஹசான் உடனான சந்திப்பில், இரு நாடுகளுக்கும் வெற்றிதரும் பங்காளித்துவத்தை மேம்படுத்துவதற்கான கடப்பாட்டை இரு தலைவர்களும் மறுஉறுதிப்படுத்தியதாக பிரதமர் வோங் தெரிவித்தார்.
இரண்டு நாள் பயணமாக திரு ஹசான் திங்கட்கிழமை (மே 27) சிங்கப்பூருக்கு வருகையளித்தார்.

