தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்காக இடங்களைக் காவல்துறை ஆராய்ந்து வருகிறது.
குழுத் தொகுதிகளில் பிரசாரக் கூட்டம் நடத்த இரண்டு இடங்களையும் தனித் தொகுதியில் பிரசாரக் கூட்டம் நடத்த ஓர் இடத்தையும் ஒதுக்க காவல்துறை இலக்கு கொண்டுள்ளது.
மதிய உணவு வேளையின்போது நடத்தப்படும் பிரசாரக் கூட்டங்களுக்காக ஓர் இடம் தேர்வு செய்யப்படும் என்று உள்துறை துணை அமைச்சர் சுன் ஷ்வெலிங் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 8) தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு, பிரசாரக் கூட்டங்களுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் எழுப்பிய கேள்விக்கு திருவாட்டி சுன் பதிலளித்தார்.
பிரசாரக் கூட்டங்களுக்காக ஒதுக்கப்படும் இடங்களைத் தெரிவிக்கும் பட்டியல் எப்போது தயாராகும் என்றும் திரு சிங் வினவினார்.
தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்கும்போது அந்தப் பட்டியலை தேர்தல் துறையால் வெளியிட முடியுமா என்றும் அவர் கேள்வி கேட்டார்.
தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு ஜனவரி 22ல் அமைக்கப்பட்டது.
வேட்பு மனுத்தாக்கல் தினத்தன்று அனைத்து வேட்பு மனுக்களும் சமர்ப்பிக்கப்பட்டதும் பட்டியல் வெளியிடப்படும் என்று திருவாட்டி சுன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் விளையாட்டரங்குகளிலும் திறந்தவெளிகளிலும் நடத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படுகிறதா என்றும் திரு சிங் கேள்வி கேட்டார்.
திறந்தவெளிகள், விளையாட்டரங்குகள், பள்ளிகள் போன்ற இடங்களைத் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்குப் பயன்படுத்துவது குறித்து காவல்துறை பரிசீலித்து வருவதாக திருவாட்டி சுன் கூறினார்.