எதிரிகள் பயன்படுத்தும் தந்திரங்கள், நிலப்பரப்பு வரம்புகள் ஆகியவற்றால் அதிகரிக்கும் அச்சுறுத்தல்களை நேர்த்தியாக எதிர்கொள்ள சிங்கப்பூர்க் காவல்துறை ஆளிலல்லா ஆயுதக் கட்டமைப்புகளைக் களமிறக்கவுள்ளது.
அவ்வகையில், பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் அபாயங்களை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபடும் கடலோரக் காவல்படை அதிகாரி, வருங்காலத்தில் ‘ஜெட்பேக்’ எனும் உந்துவிசைக் கருவி (Jet-propelled manpack) அணிந்தவாறே காவல்துறை படகிலிருந்து எதிராளிகளின் கப்பலை நோக்கி வானில் பறந்து செல்ல இயலும்.
அதிகாரிகள் அவ்வாறு எதிரிக் கப்பலில் நுழைந்து இதர நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளும் வேளையில், கப்பலை நெருங்கும் அதிகாரிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, ஆயுதங்கள் பொருத்தபட்ட ஆளில்லா வானூர்தியும் எதிராளிகளைத் தாக்குகிறது.
அச்சுறுத்தல்மிக்க சூழல்களை எதிர்காலத்தில் இப்படிப்பட்ட மேம்பட்ட தொழில்நுட்ப உதவியுடன் காவல்துறை அதிகாரிகள் சமாளிப்பர்.
நாட்டின் நீர்நிலைகளைப் பாதுகாக்க ஆளில்லா ஆயுதக் கட்டமைப்பு, ஜெட்பேக் சார்ந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து காவல்துறை சோதித்து வருகிறது.
அதன்படி, அதிகாரிகள் மேம்பட்ட வகையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் எதிராளிகளை திறம்படச் சமாளிக்க அவர்களுக்கு ஆற்றல் வழங்கவும் பொதுமக்கள், அதிகாரிகளின் பாதுகாப்பு நலனைக் காக்கவும் காவல்துறை இலக்கு கொண்டுள்ளது.
அதிகாரிகளுக்கு அரண், சவால்களை முறியடிக்கும் திறன்
இந்த இலக்குக்கு மேலும் வலுச்சேர்க்க தொழில்நுட்பத் திறனும் கைகோக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஆளில்லா ஆயுதக் கட்டமைப்புகளையும் அதன் இயக்கத்தையும் பார்வையிட்டார் தேசிய பாதுகாப்பு, ஒருங்கிணைப்பு அமைச்சர் கா.சண்முகம்.
வியாழக்கிழமை (மே 14) காலை கடலோரக் காவல்படையின் பிரானித் தீவுக்கு வருகையளித்த அவர், அங்கு காட்சிப்படுத்தப்பட்ட தொழில்நுட்பப் புத்தாக்கங்களைப் பார்வையிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற உள்துறை அமைச்சருமான சண்முகம், கடந்த ஆண்டுகளில் காவல்துறை கடந்துவந்த பாதையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பான தொழில்நுட்ப முன்னேற்றம் இது என்றார்.
‘‘இன்று, காவல்துறையின் மிகச்சிறந்த செயல்முறை விளக்கத்தைக் காட்டியது அதன் ஆளில்லா ஆயுதக் கட்டமைப்பு. சுருக்கமாகச் சொன்னால், திரைப்படங்களில் நீங்கள் பார்ப்பதுபோல ஒரு மனிதர் அதில் பறக்கிறார். இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள கப்பலுக்கு ஆயுதங்களை ஏந்தியபடி அவர் பறந்து செல்கிறார். இதற்குப் பல அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது,’’ என்றார் திரு சண்முகம்.
இவ்வகை தொழில்நுட்பக் கட்டமைப்பு அதிகாரிகளுக்கு உத்திபூர்வ சாதக நிலையை வழங்க உதவும். படகுகளில் வரும் அதிகாரிகளை நோக்கிச் சுடக்கூடிய தாக்குதல்தாரர்களைக் கட்டுப்படுத்தும் வேளையில், அதிகாரிகளுக்குப் பாதுகாப்பையும் இது வழங்குவதாக அவர் விளக்கினார் .
‘‘இந்தக் கட்டமைப்புகளின் பயன்பாடு குறித்து சோதனை செய்து வருகிறோம். மேலும், எந்தெந்தச் சூழ்நிலைகளில் இதனைப் பயன்படுத்துவது என்பது குறித்தும் கவனமாக ஆராய்வோம்,’’ என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொழில்நுட்பப் புரட்சி
பிரிட்டிஷ் நிறுவனமான கிராவிட்டி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ‘ஜெட்பேக்’குகள் ஒவ்வொன்றும் 35 கிலோ எடை கொண்டவை. மணிக்கு 137 கி.மீ. உச்சபட்ச வேகத்தை எட்டும் திறன்கொண்ட இந்தக் கருவி, ஏறக்குறைய மூன்று நிமிடங்கள் இயங்கும்.
இதன் தொடர்பில் கருத்துரைத்த காவல்துறை மூத்த உதவிக் காவல் ஆணையர் லியோன் சான், “அதிகாரிகள், பொதுமக்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு, இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்களைச் சோதித்துப் பார்ப்பதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் சிங்கப்பூர்க் காவல்துறை பொறுப்பான, நிதானமான அணுகுமுறையைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும்,” என்றார்.

