பொது இடத்தில் சமுராய் வாள் ஒன்றைப் பயன்படுத்தியதைப் படமெடுத்து காணொளியாகப் பதிவேற்றம் செய்த ஆடவர் ஒருவரின் வீட்டில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது மற்ற ஆயுதங்களும் போதைப்பொருள் கருவிகளும் அவ்வீட்டில் கண்டெடுக்கப்பட்டன.
ஜொவெல் இஸிகியல், 49, ‘நக்கல் டஸ்டர்’ எனும் ஆயுதத்தை வைத்திருந்ததற்காக திங்கட்கிழமையன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
ஊட்ரம் பார்க் பகுதியில், யோர்க் ஹில் எனும் இடத்தில் உள்ள புளோக் ஒன்றில் இரவு 7.30 மணிவாக்கில் அவர் அந்த ஆயுதத்துடன் காணப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
காணொளியில் உள்ள ஆடவரை, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் கூறினர்.
பொது இடத்தில் ஆடவர் ஒருவர் சமுராய் வாள் வைத்திருப்பதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் வலம் வந்தது. அது குறித்து காவல்துறையினரிடம் சனிக்கிழமையன்று புகார் செய்யப்பட்டது.
அந்தக் காணொளி அந்த ஆடவரின் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
புகார் கிடைத்த இரண்டு மணி நேரத்தில், அதிகாரிகள் அந்த ஆடவரை அடையாளங்கண்டு, யோர்க் ஹில்லில் உள்ள அவரது இல்லத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
அதனைத் தொடர்ந்து, தமது வீட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
அவர் தற்போது $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் 20ஆம் தேதி வழக்கு விசாரனை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

