வடிகாலில் 'காணப்பட்ட' ஆடவருக்கு வலைவீச்சு

வடிகாலில் 'காணப்பட்ட' ஆடவருக்கு வலைவீச்சு

1 mins read
9fd93b6d-49dd-4833-a68c-98bb45c4eaa5
ஹியூம் அவென்யூ வட்டாரத்தில் அமைந்திருக்கும் மூடப்பட்ட வடிகால். கூர்க்கா படையினர் அதைச் சோதித்தனர். படம்: ஷின் மின் -
multi-img1 of 2

ஹியூம் அவென்யூ வட்டார வடிகாலில் வியாழக்கிழமை காலை ஆடவர் ஒருவர் காணப்பட்டதாகத் தகவல் கிடைத்தை அடுத்து அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர்.

மூடப்பட்ட அந்த வடிகாலில் கைவிளக்கு ஒன்றுடன் அவர் சென்றதைக் கண்டதாகக் குடியிருப்பாளர் ஒருவர் காவல்துறையிடம் தெரிவித்தார்.

அதையடுத்து 10க்கு மேற்பட்ட காவல்துறை கார்களுடன் காவல்துறை அதிகாரிகள் ஏறக்குறைய 30 பேரும் கூர்க்கா படையினரும் தேடல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஐந்து மணி நேரத்துக்கு மேலாகத் தேடல் பணி நீடித்ததாக ஷின் மின் நாளேடு தெரிவித்தது. பொதுப் பயனீட்டுக் கழகத்தின் உதவியுடன் காவல்துறையினர் சில பொருள்களைக் கண்டெடுத்தனர்.

கைவிடப்பட்ட பயணப் பை, உடைகள், அணிகலன்கள், சமையலறைக் கருவிகள் ஆகியவற்றுடன் 20 பொட்டலங்களில் இருந்த கள்ள சிகரெட்டுகளையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.

வடிகாலில் காணப்பட்ட ஆடவர் அதிகாரிகள் செல்லுமுன் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகக் கூறப்பட்டது. சம்பவம் குறித்து சிங்கப்பூர் சுங்கத் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அக்கம்பக்கத்தில் யாரேனும் சந்தேகத்துக்குரிய வகையில் நடந்துகொள்வதைக் காண நேரிட்டால் காவல்துறையிடம் 999 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தகவல் அளிக்கும்படிப் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.