கசகசா என்றழைக்கப்படும் ‘பாப்பி’ போதைப்பொருளைக் கொண்ட மசாலாப் பொருளுக்கான விற்பனைப் பதிவுகள் கரோசல் மின்வர்த்தகத் தளத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன.
அதை விற்பவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டிரேடர் ஜோஸ் நிறுவனத்தின் ‘எவ்ரிதிங் பட் த பேகல்’ என்ற மசாலாப் பொருள் இணையம்வழி சிங்கப்பூரில் விற்கப்படுவதாகவும் அதுகுறித்து மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு விசாரணை நடத்திவருவதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இம்மாதம் 7ஆம் தேதி தெரிவித்தது. அந்த மசாலாப் பொருளுக்கான விற்பனைப் பதிவுகள் இடம்பெற்ற தளங்களில் கரோசலும் அடங்கும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் முன்னதாக நடத்திய சோதனைகளில் தெரியவந்தது.
டிரேடர் ஜோசின் மசாலாப் பொருளுக்கான விற்பனைப் பதிவுகளைத் தாங்கள் அடையாளம் கண்டு, கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு விடுத்த உத்தரவின்படி அவற்றை அன்றே அகற்றியதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு கரோசல் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) பதிலளித்தது.
‘பாப்பி’ போதைப்பொருள், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தடைசெய்துள்ள பொருள்களில் ஒன்றாகும். அது ஓப்பியம் போதைப்பொருளிலிருந்து எடுக்கப்படுவதும் அதில் கட்டுப்படுத்தப்பட்ட மருந்து வகைகள் இருக்கக்கூடும் என்பதும் அதற்கான காரணங்கள்.


