பள்ளிவாசலுக்குப் பன்றி இறைச்சி அனுப்பிய குற்றத்தைப் புரிந்ததாக 61 வயது சீன ஆடவர் மீது சனிக்கிழமை (செப்டம்பர் 27) குற்றம் சுமத்தப்பட்டது.
வேண்டுமென்றே சமய உணர்வைக் காயப்படுத்த அவர் அவ்வாறு செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
2 சிராங்கூன் நார்த் அவென்யூ 2ல் உள்ள அல் இஸ்திகாமா பள்ளிவாசலுக்குச் சந்தேகத்துக்குரிய பொட்டலம் அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாக செப்டம்பர் 24ஆம் தேதி மாலை 5.20 மணி அளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
அந்தப் பொட்டலத்தில் பன்றி இறைச்சி இருந்தது.
இந்த விவகாரம் குறித்து பிடோக் காவல்துறைப் பிரிவும் குற்றவியல் புலன்விசாரணை பிரிவும் விசாரணை நடத்தின.
இந்நிலையில், பொட்டலத்தை அனுப்பிவைத்தவர் என்று சந்தேகிக்கப்படும் ஆடவர் செப்டம்பர் 25ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
விசாரணை நடத்தியும் காவல்துறைக் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தும் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.
அந்த ஆடவர், சிங்கப்பூரில் உள்ள மற்ற பள்ளிவாசல்களிலும் இதே போன்று செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.