சிங்கப்பூர் மக்கள் கட்சி (சிமக) பொத்தோங் பாசிர் தனித்தொகுதியில் கட்சி பொருளாளர் வில்லியம்சன் லீயை நிற்கவைப்பதாக அறிவித்துள்ளது.
இதற்குமுன் கட்சியின் இரும்புக்கோட்டையாக இருந்த அந்தத் தொகுதியில் மும்முனைப் போட்டி இடம்பெறவிருக்கிறது.
திரு லி மக்கள் செயல் கட்சியின் அலெக்ஸ் இயோவை, 46, எதிர்த்துப் போட்டியிடுவார். இதற்குமுன் அங்கிருந்த திரு சித்தோ யீ பின்னுக்குப் பதிலாக திரு இயோ அங்கு களமிறங்குகிறார்.
சீர்திருத்த மக்கள் கூட்டணியும் பொத்தோங் பாசிரில் போட்டியிடப்போவதாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும் அங்குக் களமிறக்கப்படும் வேட்பாளர் குறித்து தகவல் எதையும் கட்சி வெளியிடவில்லை.
சிங்கப்பூர் மக்கள் கட்சி வேட்பாளராகத் திரு லீயை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) கட்சியின் தலைமைச் செயலாளர் ஸ்டீவ் சியா அறிமுகம் செய்துவைத்தார்.
திரு லீ கடந்த இருபது ஆண்டுகளாகக் கட்சியின் அசைக்கமுடியாத உறுப்பினர் என்று திரு சியா குறிப்பிட்டார்.
திரு சியா, 55, கட்சித் தலைவர் மெல்வின் சியூ, 46, செயல்பாட்டு நிர்வாகி முகமது நுர்ஹகிம்,31, சுயத்தொழில் செய்யும் திரு லிம் ருய் சியென்,37, ஆகியோர் பீஷான- தோ பாயோ குழுத்தொகுதியில் போட்டியிடவுள்ளனர்.
சிங்கப்பூர் மக்கள் கட்சியின் திரு லீ பிரசாரத்துக்குப் புதியவர் அல்ல என்ற திரு சியா, 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவர் பீஷான்- தோ பாயோ குழுத்தொகுதியில் போட்டியிட்டதைக் குறிப்பிட்டார்.

