பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பை ஏமாற்றியதாகப் பாலர் பள்ளி இயக்குநர் ஒருவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவர், அந்த அமைப்பை $14,000க்கும் அதிகமான குழந்தைப் பராமரிப்பு நிதியுதவிகளை வழங்கச்செய்ததாகவும் சில குழந்தைகளின் சேர்க்கை, வருகைப் பதிவு விவரங்களைப் போலியாகத் தயாரித்ததாகவும் கூறப்படுகிறது.
மலேசிய, சிங்கப்பூர் நிரந்தரவாசியான ஹூ சியென் சின் எனும் அந்த 46 வயது பாலர் பள்ளி இயக்குநர்மீது புதன்கிழமை (ஜூன் 24) ஏமாற்றுக் குற்றங்களுக்காக ஆறு குற்றச்சாட்டுகளும் போலிப் பதிவுகளுக்காக நான்கு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
‘லைட்ஹவுஸ் எடுகேர்’ பாலர் பள்ளியின் இயக்குநரான ஹூ, 2017 நவம்பருக்கும் 2020 ஜனவரிக்கும் இடையில் குற்றங்களைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பை ஏமாற்றி, அதனை ‘லைட்ஹவுஸ் எடுகேர்’ பாலர் பள்ளிக்கு $300 முதல் $7,400 வரை குழந்தைப் பராமரிப்பு நிதியுதவிகளை வழங்கச் செய்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அதோடு, 2018 ஜூலைக்கும் 2018 அக்டோபருக்கும் இடையே, கு வென்ஹுவி எனும் நபரைத் தூண்டிவிட்டு, பாலர் பள்ளியின் பதிவுகளில் குழந்தையின் பொய்யான வருகையைப் பதிவுசெய்ய வைத்ததாகவும் அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதன் பிறகு, 2019 மார்ச்சிலும் 2020 பிப்ரவரியிலும், நிறுவனப் பதிவுகளில் குழந்தைகளின் வருகையைப் பதிவுசெய்தபோது ஹூ பொய்யான பதிவுகளைச் சேர்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
குற்றத்தை ஒப்புக்கொள்ளப்போகிறாரா என்பது குறித்து அவர் எந்தவொரு பதிலும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் சட்ட ஆலோசனை பெறுவதற்குக் கால அவகாசம் கோரினார்.
வழக்கு ஜூலைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

