வியட்னாமில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபருக்கும் பிரதமருக்கும் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னமும் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாரத் தொடக்கத்தில் நடைபெற்ற வாக்களிப்பில் வியட்னாமிய அதிபராக தோ லாமும் பிரதமராக லெ மின் ஹுங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிபர் லாம் வியட்னாமிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலாளர் ஆவார்.
அவருக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், வியட்னாமுடன் கொண்டிருக்கும் வலுவான, நீண்டகால உறவின்மீது சிங்கப்பூர் நன்மதிப்பு கொண்டிருப்பதாக அதிபர் தர்மன் குறிப்பிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் திரு லாம் சிங்கப்பூர் வந்திருந்தபோது விரிவான உத்திபூர்வ பங்காளித்துவ உடன்பாட்டின் மூலம் இரு நாடுகளின் உறவு மேம்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஹுங்கிற்குப் பிரதமர் லாரன்ஸ் வோங் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், அணுக்க ஒத்துழைப்பு, வலுவான பொருளியல் தொடர்பு, வட்டார மற்றும் அனைத்துலக நிலைத்தன்மை, வளமை ஆகியவற்றின் மீதான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வை போன்றவற்றால் சிங்கப்பூர் - வியட்னாம் உறவுகள் நெருக்கமாகவும் நீண்டகாலம் நிலைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

