அதிபர் தர்மன் சண்முகரத்னம் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் சிங்கப்பூரர்களுக்கும் தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாக கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
பாரிஸ் நகரில் நோட்ர டேம் தேவாலயம் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் கிட்டத்தட்ட தீக்கிரையான நிலையில் சில வாரங்களுக்குமுன் அது புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டதைக் குறிப்பிட்ட அதிபர், பதற்றம் நிறைந்த இவ்வுலகில் பேரின்பம் தருவதாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
தீச்சம்பவத்திற்குமுன் உலகில் அதிகமானோர் பார்வையிட்ட தேவாலயமாகவும் உலகப் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்றாகவும் அது திகழ்ந்தது எனத் திரு தர்மன் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தேவாலயத்திற்குச் சென்றோர் பல நூற்றாண்டுகாலப் பிரெஞ்சு வரலாறும் சமயமும் பிற அம்சங்களும் அதனை வடிவமைப்பதில் ஏற்படுத்திய தாக்கங்களிலும் மூழ்கியது போன்ற உணர்வைப் பெற்றிருப்பர் என்று அவர் கூறியுள்ளார்.
அந்தத் தேவாலயத்தின் மறுசீரமைப்புப் பணி ஒற்றுமையை பறைசாற்றுவதாகக் குறிப்பிட்ட அதிபர், மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட்ட 2,000 கைவினைஞர்களில் சிலர் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், யூதர்கள், ஒரு சிலர் இந்துக்கள் என்பதையும் சுட்டியுள்ளார்.
நம்பிக்கையை எவ்வாறு ஏற்படுத்தலாம், அதனை எவ்வாறு பகிர்ந்துகொள்ளலாம் என்பதற்கான நினைவூட்டலாகவும் அந்த மறுசீரமைப்புப் பணி அமைந்துள்ளது என்றும் திரு தர்மன் தெரிவித்துள்ளார்.

