ஏ.ஆர். ரகுமானை பாராட்டிய அதிபர் தர்மன்

2 mins read
561ac917-1824-48fa-83a4-569cade52f2a
தமது சிங்கப்பூர் பயணத்தின்போது ஏ.ஆர். ரகுமான் அதிபர் தர்மனை சந்தித்துப் பேசினார். - படம்: அதிபர் தர்மன் சண்முகரத்னம்

சிங்கப்பூர் இசைக் கலைஞர்களுடன் இணைந்து வேலை செய்யும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை அதிபர் தர்மன் சண்முகரத்னம் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அதிபர் தர்மன் தமது சமூக ஊடகத்தில் திங்கட்கிழமை (ஜூன் 2) பதிவிட்டார்.

“சிங்கப்பூரில் இந்திய இசை மற்றும் கலாசாரத் திறமைகள் சிறிய அளவில்தான் உள்ளது. ஆனால் அது நாட்டின் பன்முகக் கலாசாரத்திற்குச் சிறப்பு சேர்கிறது,” என்று திரு தர்மன் குறிப்பிட்டார்.

“சிங்கப்பூர் இசைக் கலைஞர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் நல்ல வாய்ப்புகளையும் அனுபவங்களையும் கொடுத்துள்ளார். இதனால் அவர்களது திறமை உலக அளவில் பேசப்பட்டது,” என்று அதிபர் தர்மன் கூறினார்.

உள்ளூர் பாடகர்-பாடல் எழுத்தாளர் லேடி கே‌ஷ், கிரிஸ்ஸி கூட்டணி, பாடகர்-இசையமைப்பாளர் ‌‌ஷபீர், பாடகர் யங் ராஜா உள்ளிட்டவர்களுடன் ஏ.ஆர்.ரகுமான் இணைந்து வேலை செய்துள்ளார்.

லேடி கே‌ஷ், கிரிஸ்ஸி கூட்டணியுடன் இணைந்து ஏ.ஆர்.ரகுமான் தயாரித்த Wanna Mash Up? பாடல் பெரிய அளவில் வெற்றிபெற்றது. அது Highway என்னும் இந்திப் படத்தில் வரும்.

ஏர்.ஆர். ரகுமான் கிராமி, ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட விருதுகளை வென்று உலக அளவில் இந்திய இசையை எடுத்துச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் 58 வயது ரகுமான் சிங்கப்பூருக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். தமது ‘லே மஸ்க்’ திரைப்படத்தை வெளியிட மே 10, 11ஆம் தேதிகளில் அவர் சிங்கப்பூருக்கு வந்திருந்தார்.

தமது பயணத்தின்போது ஏர்.ஆர். ரகுமான் அதிபர் தர்மனை சந்தித்துப் பேசினார்.

அதிநவீனத் தொழில்நுட்பத்தைக் கொண்டு உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தட்டியெழுப்பும் ‘லே மஸ்க்’ திரைப்படம் சன்டெக் சிட்டியில் உள்ள கோல்டன் வில்லேஜ் திரையரங்கில் ஆகஸ்ட் 12ஆம் தேதிவரை திரையிடப்படும்.

குறிப்புச் சொற்கள்