அதிபர் தர்மன் சண்முகரத்னம் ஜூன் 22ஆம் தேதி போப் பிரான்சிசைச் சந்தித்த பிறகு, ஜூன் 24 முதல் ஜூன் 26ஆம் தேதிவரை இத்தாலிக்கும் எஸ்டோனியாவுக்கும் அதிகாரபூர்வ பயணங்களை மேற்கொள்வார்.
இத்தாலிய அதிபர் செர்கியோ மாட்டாரெல்லா, எஸ்டோனிய அதிபர் அலர் கரிஸ் ஆகியோரின் அழைப்பின்பேரில் அவர் அந்நாடுகளுக்குச் செல்கிறார்.
அதற்கு முன்னர், திரு தர்மன் ஜி-30 கூட்டத்திற்காக ரோமில் இருப்பார். ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை தண்ணீர்ப் பொருளாதாரம் தொடர்பான உலக ஆணைக்குழுக் கூட்டத்தை அவர் இணைந்து வழிநடத்துவார்.
ரோமில், திரு தர்மன் போப்பாண்டவரை அதிகாரபூர்வமாகச் சந்திப்பார்.
அதோடு, ஹெல்சிங்கியில் ஃபின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் அவருக்கு காலை விருந்து அளித்து உபசரிப்பார்.
திரு தர்மனுடன் அவரது துணைவியார் திருவாட்டி ஜேன் இத்தோகி, பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான், வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீத்தோ யி பின், ஷாரெல் தாஹா ஆகியோர் பயணம் மேற்கொள்வார்கள்.
திரு தர்மன் இத்தாலிக்குச் செல்லும்போது, அவருக்குச் சடங்குபூர்வ வரவேற்பு வழங்கப்படும். அங்கு அவர் திரு மாட்டாரெல்லாவையும், பிரதமர் ஜியோர்ஜியா மெலொனியையும் சந்திப்பார்.

