அதிபர் தர்மன் சண்முகரத்னத்தின் தாயாரான திருமதி சர்வாம்பிகை சண்முகரத்னம், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 99.
அவரது மறைவை அதிபர் அலுவலகம் திங்கட்கிழமை (ஏப்ரல் 20) உறுதி செய்தது.
குடும்பத்தார் மட்டுமே கலந்துகொண்ட இறுதிச் சடங்கிற்குப் பிறகு திருமதி சர்வாம்பிகையின் நல்லுடல் தகனம் செய்யப்பட்டதாகத் தெரிவித்தது.
Obits.sg இணையப்பக்கத்தில் திருமதி சர்வாம்பிகையின் மரண அறிவிப்பு பதிவேற்றம் செய்யப்பட்டது.
திருமதி சண்முகரத்னம் 1926 ஜூலை 5ஆம் தேதி கோலாலம்பூரில் பிறந்தார். இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் ஏ. விஸ்வலிங்கம் மற்றும் திருமதி ரத்னம்மாள் ஐயாதுரை தம்பதிக்குப் பிறந்த 11 குழந்தைகளில் இவர் நான்காவது பிள்ளை.
மறைந்த ஓய்வுபெற்ற கௌரவப் பேராசிரியர் கனகரத்னம் சண்முகரத்னத்தை அவர் மணந்தார்.
திருமதி சர்வாம்பிகைக்கு மூன்று பிள்ளைகள், நான்கு பேரப்பிள்ளைகள் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

