அதிபர் தர்மன் சண்முகரத்னம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) முதல் ஜூலை 15ஆம் தேதி வரை மலேசியாவுக்கு நான்குநாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தரின் அழைப்பை ஏற்று மலேசியா செல்லும் அதிபர் தர்மன், கோலாலம்பூரிலும் சிலாங்கூரிலும் சந்திப்புகளை நடத்துவார் என்று வெளியுறவு அமைச்சின் செய்தியறிக்கை தெரிவித்தது.
மலேசியாவுக்கு அதிபர் தர்மன் அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும்.
அதிபருடன் அவரது மனைவி ஜேன் இட்டோகி சண்முகரத்தினமும் உடன் செல்வார். மலேசியாவிற்கு அரசுமுறைப் பயணமாக அதிபருடன் அரசாங்கத்தின் முக்கியப் பிரநிதிகளும் செல்கின்றனர்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான கிரேஸ் ஃபூ, சமுதாய குடும்ப மேம்பாடு, வெளியுறவு துணையமைச்சர் சுல்கர்னைன் அப்துல் ரஹிம், மத்திய சிங்கப்பூர் வட்டார மேயர் டெனிஸ் புவா, ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடியா சம்டின், எட்வர்ட் சியா அடங்கிய உயர்மட்டக் குழுவினர் மலேசியா சென்றுள்ளனர். வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளும் அக்குழுவில் அடங்குவர்.
கோலாலம்பூர் சென்றடையும் அதிபருக்கு, மலேசிய மாமன்னரின் அதிகாரபூர்வ இல்லமான இஸ்தானா நெகாராவில் சிறப்பு அரசு வரவேற்பு அளிக்கப்படும்.
தொடர்ந்து, அவர் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், ராணி ராஜா ஜாரித் சோஃபியா ஆகியோரைச் சந்தித்து, அரசு விருந்தில் பங்கேற்பார்.
அதன்பிறகு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், அதிபர் தர்மனைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
பொருளியல், நிதித்துறைத் தலைவர்களுடனான சந்திப்பு, வர்த்தக வட்டமேசை மாநாடு, மலேசியாவில் வாழும் சிங்கப்பூரர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி ஆகியவற்றிலும் அதிபர் கலந்துகொள்கிறார்.
பின்னர் சிலாங்கூர் செல்லும் அதிபர் தர்மன், அங்கு மன்னர் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா, மாநில முதலமைச்சர் அமிருதின் ஷாரியையும் சந்திப்பார்.

