இவ்வாண்டுக்கான தொடக்கநிலை 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான 2சி கட்டத்தின் இரண்டாம் நாளுக்குள், 181 தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 67 பள்ளிகள் அதிகமான விண்ணப்பங்களைப் பெற்றன.
புக்கிட் பாத்தோக்கில் உள்ள பிரின்சஸ் எலிசபெத் தொடக்கப்பள்ளிக்கு ஆக அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன. அந்தப் பள்ளியில் 48 இடங்களுக்கு 249 விண்ணப்பங்கள் வந்தன.
ஈசூனில் உள்ள நார்த்லேண்ட் தொடக்கப் பள்ளி 44 இடங்களுக்கு 195 விண்ணப்பங்களைப் பெற்றது.
கிளமெண்டியில் உள்ள நன் ஹுவா தொடக்கப் பள்ளியில் 40 இடங்களுக்கு 161 விண்ணப்பங்கள் வந்தன.
மாணவர் சேர்க்கைக்கான முதல் நாளிலேயே 47 பள்ளிகளில் அளவுக்கு அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன. தெம்பனிசில் உள்ள செயிண்ட் ஹில்டாஸ் தொடக்கப்பள்ளி, ஹவ்காங்கில் உள்ள ஹோலி இன்னசன்ஸ் தொடக்கப் பள்ளி ஆகிய பிரபலமான பள்ளிகள் அவற்றில் அடங்கும்.
2சி கட்டத்திற்கான பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கி, வியாழக்கிழமை நிறைவுபெற்றது.
அதற்கான முடிவுகள் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடப்படும்.
2சி கட்டத்தில் விண்ணப்பித்து பள்ளிகளில் இடம் கிடைக்காதவர்கள் மீண்டும் 2சி துணைக் கட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம். அதற்கான பதிவு ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கும்.
2022இல் 2சி கட்டத்திற்கு மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு தொடக்கப் பள்ளியிலும் ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை 20லிருந்து 40க்கு அதிகரிக்கப்பட்டது.
2சி கட்டத்தில், அதிகமான பிள்ளைகள் தங்கள் வீட்டுக்கு அருகிலேயே உள்ள பள்ளிக்கூடத்தில் சேர உதவுவதற்காக அந்த மாற்றம் கொண்டுவரப்பட்டதாக கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.