பிரதமர் லாரன்ஸ் வோங் புருணை, மலேசியா நாடுகளுக்கு இரு நாள் அறிமுகப் பயணம் மேற்கொள்கிறார்.
புருணை சுல்தான் ஹசனல் போல்கியா, மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஆகியோரின் அழைப்பை ஏற்று இரு நாடுகளின் தலைநகரங்களுக்கும் ஜூன் 11, 12ஆம் தேதிகளில் அவர் செல்கிறார்.
தென்கிழக்காசிய நாடுகளின் தலைநகரங்களுக்குப் பிரதமராக திரு வோங் மேற்கொள்ள இருக்கும் அறிமுகப் பயணங்களின் தொடக்கமாக இந்தப் பயணம் அமைகிறது.
புருணையில் சுல்தான் ஹசனல் போல்கியாவையும் அவரது மனைவி ராஜா இஸ்த்ரி பெங்கிரான் அனாக் ஹாஜா சாலெஹாவையும் பிரதமரும் அவரது குழுவினரும் சந்திப்பார்கள். பின்னர் சுல்தான் அளிக்கும் அதிகாரபூர்வ மதிய விருந்தில் பங்கேற்பார். புருணையின் பட்டத்து இளவரசரும் மூத்த அமைச்சருமான இளவரசர் அல் முஹ்டாடி பில்லா, அவரது மனைவி சாராவையும் அவர்கள் சந்திப்பார்கள்.
பிரதமர் வோங்குடன், திருமதி வோங், வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான கிரேஸ் ஃபூ, தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, தொடர்பு, தகவல் மற்றும் சுகாதார துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸம் ஆகியோர் புருணை செல்கின்றனர்.
ஜூன் 11ஆம் தேதி மாலை பிரதமர் புருணையிலிருந்து மலேசியாவிற்குச் செல்வார். ஜூலை 12ஆம் தேதி பிரதமரும் நிதி அமைச்சருமான திரு அன்வார் இப்ராகிமை பிரதமர் வோங் சந்திக்கிறார்.
பிரதமரின் பயணத்தின்போது துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் இடைக்காலப் பிரதமராகப் பணியாற்றுவார்.