நவம்பர் 14ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதி வரை பெருவின் தலைநகர் லிமாவில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) தலைவர்களுக்கான மாநாட்டில் பிரதமர் லாரன்ஸ் வோங் கலந்துகொள்கிறார்.
அதன் பிறகு, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகருக்கு அவர் பயணம் மேற்கொள்வார்.
அங்கு நவம்பர் 17ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை நடைபெறும் ஜி-20 மாநாட்டில் அவர் கலந்துகொள்வார் என்று பிரதமர் அலுவலகம் நவம்பர் 13ஆம் தேதியன்று அறிக்கை வெளியிட்டது.
அந்த இரு மாநாடுகளில் கலந்துகொள்வதுடன் அவ்விரு நகரங்களிலும் பிற நாட்டுத் தலைவர்களையும் பிரதமர் வோங் சந்தித்துப் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் பிரதமராக அனைத்துலக அளவில் முக்கியமான இந்த இரு மாநாடுகளிலும் திரு வோங் கலந்துகொள்வது இதுவே முதல்முறை.
சிங்கப்பூரின் பிரதமராக அவர் தென் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வதும் இது முதல்முறை.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் இவ்விரு மாநாடுகளில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏபெக்கின் 21 உறுப்பு நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய வல்லரசுகளும் ஏபெக்கில் இடம்பெறுகின்றன.