இந்தோனீசிய அதிபராக பிரபோவோ சுபியாந்தோ பதவி ஏற்கும் நிகழ்வில் பங்கேற்க பிரதமர் லாரன்ஸ் வோங் ஜகார்த்தா செல்கிறார்.
நாளையும் நாளை மறுதினமும் (அக்டோபர் 20, 21) அவர் இந்தோனீசியாவில் இருப்பார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற திரு பிரபோவாவுக்கு வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்கள் பதவி ஏற்பு நிகழ்வில் ஒன்றுகூடுகின்றனர். அவர்களுடன் திரு வோங்கும் இணைந்துகொள்வார்.
“ஓர் அண்டை நாடு என்ற முறையில் திரு வோங்கின் பயணம் சிங்கப்பூர்-இந்தோனீசிய உறவின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
“மேலும், இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதில் சிங்கப்பூர் கொண்டிருக்கும் கடப்பாட்டையும் அப்பயணம் மறுஉறுதி செய்யும்,” என பிரதமர் அலுவலகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
குறிப்பாக, இவ்வாண்டு ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற்ற சிங்கப்பூர் - இந்தோனீசியத் தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்ட மிகவும் முன்னுரிமை பெறக்கூடிய அம்சங்களும் அந்தக் கடப்பாட்டில் அடங்கும்.
பிரதமர் வோங்குடன் அவரது துணைவியாரும் பிரதமர் அலுவலகம் மற்றும் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளும் ஜகார்த்தா செல்கின்றனர்.