2011 பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காகப் பொதுச் சேவையிலிருந்து விலக பிரதமர் லாரன்ஸ் வோங் முடிவு செய்தபோது, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவருக்கு என்ன பதவி அல்லது என்ன சம்பளம் கிடைக்கும் என்று யாரும் அவரிடம் சொல்லவில்லை.
“நான் எங்கு போட்டியிடுவேன், நான் தேர்ந்தெடுக்கப்படுவேனா, என்னென்ன பொறுப்புகளை நான் ஏற்க வேண்டியிருக்கும் அல்லது எனக்கு என்ன சம்பளம் வழங்கப்படும் என்பது எனக்கு அப்போது தெரியாது,” என்று பிரதமர் வோங், அரசியலில் நுழைந்த தனது அனுபவத்தை வியாழக்கிழமை (செப்டம்பர் 10) நாடாளுமன்றத்தில் நினைவுகூர்ந்தார்.
“நீங்கள் வெற்றி பெற்றால், உங்களுக்கு இந்தப் பதவி கிடைக்கும் என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை. இதுதான் ஊதியத் தொகுப்பு என்றும் யாரும் கூறவில்லை. இது முழுமையாக நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு முடிவாகும்,” என்று அவர் கூறினார்.
அப்போது எரிசக்தி சந்தை ஆணையத்தின் தலைமை நிர்வாகியாக இருந்த பிரதமர் வோங் வேலையிலிருந்து விலகியபோது, ஓய்வூதியத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான 15 ஆண்டு கால வரம்பை எட்ட சிறிது காலமே இருந்ததால், தமது ஓய்வூதியத்தை இழந்ததாகக் கூறினார்.
2011 ஆம் ஆண்டில் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட மக்கள் செயல் கட்சி அணியின் ஒரு பகுதியாக அவர் களமிறக்கப்பட்டார். அந்த அணி சீர்திருத்தக் கட்சிக்கு எதிராக 66.57 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.
செப்டம்பர் 8 ஆம் தேதி சம்பள மாற்றங்களை அறிவித்தபோது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தமது முழுச் சம்பள உயர்வையும் நல்ல காரியங்களுக்கு நன்கொடையாக வழங்குவதாகப் பிரதமர் வோங் கூறியிருந்தார்.
பிரதமரின் ஆண்டுச் சம்பளம், போனஸ் உட்பட $2.2 மில்லியனிலிருந்து $3.6 மில்லியனாக உயரும். இதன் பொருள் அவர் ஒவ்வோர் ஆண்டும் $1.4 மில்லியனை நன்கொடையாக வழங்குவார் என்பதாகும்.
செப்டம்பர் 10 ஆம் தேதி அரசியல்வாதிகளின் சம்பள மாற்றங்கள் குறித்த விவாதத்தின் போது தாம் ஆற்றிய உரையில், இது தொடர்பான கேள்விகளைத் தொடர்ந்து நன்கொடைகளிலிருந்து கிடைக்கும் எந்தவொரு வரிச் சலுகையையும் தான் நன்கொடையாக வழங்குவதாக பிரதமர் வோங் தெளிவுபடுத்தினார்.
தாம் பொதுச்சேவையிலேயே இருந்திருந்தால் நிரந்தரச் செயலாளராக ஆகியிருக்கலாம் என்பதால், அரசியலில் இணையும் தனது முடிவை எண்ணி வருந்துகிறாரா என்று நண்பர்கள் சிலர் தம்மிடம் கேட்டதாக அவர் கூறினார்.
அந்நிலையில் தாம் தொடர்ந்து சிங்கப்பூருக்குச் சேவை செய்யலாம். அதே வேளையில், தமது ஓய்வூதியத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கலாம். அதிகமாகச் சம்பாதித்திருக்கலாம். அத்துடன், பொதுமக்களால் அவ்வளவாக கூர்ந்த கவனிக்கப்படாத வாழ்க்கைமுறையை வாழ்ந்திருக்கலாம்.
இருந்தபோதும் அரசியல் சேவை என்பது வேறு வகையான பொறுப்பு என்று அவர் கூறினார்.
“நீங்கள் முடிவுகளை நிறைவேற்றவோ அல்லது முடிவுகளைச் செயல்படுத்தவோ மட்டும் உதவவில்லை. நீங்கள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும், உத்திபூர்வமாக இலக்குகளை வகுத்து மக்களை உங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டும். இறுதியில் அதன் விளைவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்,” என்றார் திரு வோங்.

