சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், ஆசியான்-ரஷ்யா உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார். உச்சநிலை மாநாடு ஜூன் 17,18 காஸான் நகரில் நடக்கிறது.
ரஷ்யாவின் தென்மேற்குப் பகுதியில் காஸான் உள்ளது.
ஆசியான்-ரஷ்யாவின் உறவு 35 ஆண்டை எட்டியுள்ள நிலையில் இந்த உச்சநிலை மாநாடு நடக்கிறது. அதேபோல், ஆசியாவின் பங்காளியாக ரஷ்யா இணைந்து 30 ஆண்டுகளாகிறது.
உச்சநிலை மாநாட்டை ரஷ்ய அதிபர் புட்டின் தலைமை தாங்கி நடத்துகிறார். சிறப்பு இரவு விருந்து, அரசதந்திர உறவுகள் குறித்து பேசிக்கொண்டே மதிய உணவு போன்ற அங்கங்கள் மாநாட்டில் இடம்பெறுகிறது.
பிரதமர் வோங்குடன் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் செல்கிறார்.
“ஆசியானும் ரஷ்யாவும் அதன் பங்காளித்துவத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வழிகள் குறித்து பேசவுள்ளனர்,” என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை (ஜுன் 16) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
கல்வி, கலாசாரம், தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைகளிலும் இணக்கமாகச் செயல்படுவது குறித்தும் உச்சநிலை மாநாட்டில் பேசப்படவுள்ளது.
இதற்குமுன் ஆசியான்-ரஷ்யா உச்சநிலை மாநாடு 2021ஆம் ஆண்டு காணொளி வாயிலாக நடந்தது. அப்போது சிங்கப்பூர் பிரதமராக இருந்த திரு லீ சியன் லூங் மாநாட்டில் கலந்துகொண்டார். திரு லீ 2016ஆம் ஆண்டு சோச்சியில் நடந்த ஆசியான்-ரஷ்யா உச்சநிலை மாநாட்டிலும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
ஆசியான் கூட்டமைப்பு ஐரோப்பிய மன்றன், அமெரிக்கா, சீனா ஆகியவற்றுடனும் தனித்தனியாக உச்சநிலை மாநாடுகளை நடத்திவருகிறது.
ரஷ்யா, 2022ஆம் ஆண்டு உக்ரேன்மீது படையெடுத்த பிறகும் ஆசியான் மாஸ்கோவுடனான உறவைக் கிழக்கு ஆசிய உச்சநிலை மாநாடு, ஆசியான் வட்டார மாநாடு ஆகியவற்றின்மூலம் உறவைத் தொடர்ந்தது.
ஆசியானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உள்ள பொதுவான சவால்களை மட்டுமே அந்த மாநாடுகளில் பேசப்பட்டு வருகின்றன.
அனைத்துலக சட்டவிதிமுறைகளை மீறி ரஷ்யா உக்ரேனைத் தாக்கியது தொடர்பாகச் சிங்கப்பூர் கண்டனம் தெரிவித்தது.
ரஷ்யாவின் நடவடிக்கையை எதிர்த்து சிங்கப்பூர் 2022ஆம் ஆண்டு சில தடைகளை விதித்தது. அது தற்போது நடப்பில் உள்ளது.
பிரதமர் வோங் நாட்டில் இல்லாதபோது துணைப் பிரதமர் கான் கிம் யோங், தற்காலிகப் பிரதமராகச் செயல்படுவார்.

