பிரதமர் லாரன்ஸ் வோங், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) நடைபெறவிருக்கும் தேசிய தினப் பேரணியில் நான்கு முக்கிய விவகாரங்கள் குறித்து உரையாற்றவிருக்கிறார்.
சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) ஃபேஸ்புக்கில் அதுகுறித்து அவர் பதிவிட்டார்.
அதில், துரிதமாக மாறிவரும் உலகில் சிங்கப்பூரும் அதனுடன் சேர்ந்து மாறவேண்டும் என்று பிரதமர் வோங் வலியுறுத்தினார்.
தேசிய தினப் பேரணியின்போது பேசப்போகிற விவகாரங்கள் குறித்து மேலோட்டமாகக் கூறிய அவர், சிங்கப்பூர் எதிர்கொள்ளும் சவால்களை எவ்வாறு கடந்து வரும் என்பது குறித்து பகிர்ந்துகொள்ளப்போவதாகக் குறிப்பிட்டார்.
அதில் முதலாவதாக அவர், தொழில்நுட்பத்தை அரவணைப்பதைக் குறிப்பிட்டார்.
அடுத்ததாக, சிங்கப்பூர் ஒருங்கிணைப்பைப் பேணிக்காக்கும் அதேவேளை, திறந்த மனப்பான்மையுடனும் தொடர்பில் உள்ள நிலையிலும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
குடும்பங்களும் கூடுதல் ஆதரவு பெறவேண்டும் என்றார் பிரதமர்.
முக்கியமாக, சிங்கப்பூர் எதிர்காலத்துக்குத் தொடர்ந்து திட்டமிட்டுக் கட்டமைக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இம்மாத தொடக்கத்தில், சிங்கப்பூரர்கள் அனைவரும் ஒருவர்மீது ஒருவர் நம்பிக்கை வைக்கவேண்டும் என்ற பிரதமர் வோங், ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியிட்ட தேசிய தின செய்தியில் நாட்டின் உறுதிமொழியின் கொள்கைகளுக்கு உண்மையாக இருக்கும்படி அழைப்பு விடுத்தார்.
சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் உலகத்துடன் தொடர்ந்து இணைந்திருப்பது அவசியம் என்று விளக்கம் அளித்த அவர், பல்வேறு தூண்டுதல்கள் எழுந்தாலும் உள்நோக்கித் திரும்பக்கூடாது என்று குறிப்பிட்டார்.
“திறந்த மனப்பான்மையுடன் இருந்தது வரலாற்றில் நமக்கு நல்ல பலன் தந்துள்ளது. இனிவரும் ஆண்டுகளில் வெற்றியடைய அதேபோல தொடர்ந்திருப்பது முக்கியம்,” என்று பிரதமர் வோங் கூறினார்.
தற்காலத்திலும் எதிர்காலத்திலும் எதிர்கொள்ளக்கூடிய புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழல் குறித்தும் பிரதமர் பேசினார்.
சிங்கப்பூரர்களும் துணை நிற்கும் அதேவேளை, தொழில்நுட்ப வளர்ச்சியைச் சொந்த நிபந்தனைகளின்படியே சிங்கப்பூர் ஏற்கும் என்றும் திரு வோங் தெரிவித்தார்.
குடும்ப வாழ்க்கையும் அதிகமான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதை ஒப்புக்கொண்ட அவர், தேசிய தின உரையில் அதுபற்றி கூடுதலான தகவல்கள் பகிரப்படும் என்றார்.
பிரதமர் வோங்கின் உரை மலாய்மொழியில் மாலை 6.45 மணிக்கும் இடம்பெறும். அதைத்தொடர்ந்து மாண்டரின் மொழியிலும் இரவு 8 மணிக்கு ஆங்கில மொழியிலும் அது ஒளிபரப்பப்படும்.
பிரதமர் வோங் அங் மோ கியோவில் உள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் உரையாற்றுவார். பிரதமர் அலுவலகத்தின் யூடியூப் பக்கத்திலும் நேரலையாக அது ஒளிபரப்பப்படும்.


