வெளிநாட்டவருக்கு நிரந்தரவாசத் தகுதி பெற்றுத்தருவதாக மோசடி செய்தவருக்குச் சிறை

வெளிநாட்டவருக்கு நிரந்தரவாசத் தகுதி பெற்றுத்தருவதாக மோசடி செய்தவருக்குச் சிறை

2 mins read
78f20e92-818e-4cba-85e5-ba3b34771486
தண்டனையின் விவரங்களை அறிவித்தபோது, மாவட்ட நீதிபதி டான் ஜென் சே, மோசடித் திட்டம் மிகவும் நவீனமானது என்றார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

‘முதலீடுகளுக்கு’ ஈடாகப் போலியான வேலை ஏற்பாடுகள் மூலம் வேலை அனுமதிச் சீட்டுகளை வழங்கிய மோசடித் திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த பெண்ணுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரர் என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த 43 வயதுப் பெண்ணின் பெயர் வாங் ஜுயே. செவ்வாய்க்கிழமை (ஜூலை 14), அவருக்கு 10 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. வேலை அனுமதிச்சீட்டுக்கான படிவத்தில் அவர் பொய்த் தகவலைக் கொடுத்த குற்றம் நிரூபிக்கப்பட்டது.

குற்றச்சாட்டுக்கு எதிராக வாதிட்டபோதும் குற்றம் நிரூபிக்கப்பட்டது.

இந்த முதலீட்டு ஒப்பந்தம் எந்த லாபத்தையும் தராத ஏமாற்று வேலை என்பதையும் வேலைவாய்ப்பு அனுமதி மட்டுமே இதன் மூலம் கிடைத்த ஒரே பலன் என்பதையும் நீதிபதி கண்டறிந்தார்.

சிங்கப்பூரில் நிரந்தரவாசத் தகுதியைப் பெறும் நம்பிக்கையில், சீன நாட்டவர் ஒருவர், போலியான வேலை ஏற்பாட்டில் ‘முதலீடாக’ $360,000 (US$278,970) செலுத்தினார். சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனம், அவருக்கு வேலை அனுமதிச்சீட்டை வழங்குவதற்கு ஈடாக அந்த முதலீட்டைப் பெற்றுக்கொண்டது.

சிங்கப்பூரில் நிரந்தரவாசத் தகுதி பெறும் நம்பிக்கையில், $1 மில்லியனை முதலீடாகச் செலுத்திய சீனாவைச் சேர்ந்த மற்றொருவர் தொடர்பான வழக்கில், வாங் பெயர் முன்னதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆங் செக் சாய் என்பவருக்குச் சொந்தமான எம்டபிள்யூ டைனமிக்ஸ் நிறுவனத்தில் ‌ஷாங் சிங்கியாவோ பணியமர்த்தப்படுவார் என்று பொய்யான அறிக்கையை வெளியிடுவதற்கு, அந்த ஆடவர் இருவருக்கும் ஷாங் உடந்தையாக இருந்திருந்தார்.

‌ஷாங், தனது சாட்சியத்தில், சிங்கப்பூருக்குத் தாம் குடிபெயர்வதற்கு உதவக்கூடிய குடிநுழைவு முகவராக வாங் தமக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகச் சொன்னார்.

அவர் $360,000 முதலீட்டிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்; அதில் 36 மாதங்களுக்கு மாதந்தோறும் $10,000 நிலையான ஈவுத்தொகையும் எம்டபிள்யூ அவருக்கு வேலைவாய்ப்பு அனுமதிச்சீட்டு வழங்குவதற்கான நிபந்தனையும் அடங்கியிருந்தன.

எம்டபிள்யூ நிறுவனத்தில் பணிபுரியாதபோதும், ‌ஷாங் 13 மாதங்களுக்கு எம்டபிள்யூ நிறுவனத்திடமிருந்து மாதந்தோறும் $10,000 ‘சம்பளம்’ பெற்றார். அது தமது அசல் முதலீட்டுத் தொகையும் முதலீட்டிற்குமான ஈவுத்தொகையும் என்று அவர் கூறினார்.

தண்டனையின் விவரங்களை அறிவித்தபோது, மாவட்ட நீதிபதி டான் ஜென் சே, இந்த மோசடித் திட்டம் மிகவும் நவீனமானது என்றார். இதில் பங்கேற்பதற்காகச் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றைக் கண்டறிவதும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.

வாங், தண்டனையையும் தீர்ப்பையும் எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்