மூத்தோர் தாதிமை இல்லத்தில் தங்கியிருந்த 72 வயது முதியவரிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட 27 வயது ஊழியருக்கு ஒரு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரைச் சேர்ந்த திஹா எனும் அந்த ஆடவர், அல்ஜூனிட்டில் உள்ள செயிண்ட் தாதிமை இல்லத்தில் சுகாதார உதவி ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த மே 1ஆம் தேதி மாலை, பாதிக்கப்பட்ட முதியவரின் வாயை திஹா சுத்தம் செய்ய முயன்றபோது, அவர் அதற்கு மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த திஹா, முதியவரின் வலது கையைப் பலமாகப் பிடித்துக் கொண்டு, அவர் மீது ஏறி அமர்ந்து அசைய முடியாதவாறு அழுத்திப் பிடித்துள்ளார்.
மேலும், முதியவரின் கழுத்தைப் பிடித்துக் கட்டிலோடு சேர்த்து திஹா அழுத்தியுள்ளார்.
சத்தம் கேட்டு மற்றொரு ஊழியர் வந்ததையடுத்து திஹா முதியவரை விடுவித்தார். இந்த நடவடிக்கையால் முதியவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.
மனநலப் பாதிப்பு, நீரிழிவு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள அந்த முதியவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்.
தம்மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டுகளை திஹா ஒப்புக்கொண்டார்.


