வாக்குவாதத்தால் கோபமடைந்த ஆடவர் ஒருவர், தம்முடன் வேலைபார்த்த மற்றோர் ஆடவரைக் கத்தரிக்கோல்கள் கொண்டு தாக்கினார்.
டான் கே லியோங், 46, எனும் ஆடவர், 58 வயது ஆடவர் ஒருவரின் முகத்தில் கத்தரிக்கோல்களை வீசினார். இதனால், அந்த ஆடவரின் இடது கன்னத்தில் காயம் ஏற்பட்டது. மேலும், டான் கடைத் திருட்டிலும் ஈடுபட்டார்.
டான் செய்த குற்றங்களுக்காக அவருக்கு 22 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை டான் ஒப்புக்கொண்டார்.
தாக்குதல் சம்பவம் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி இயோ சூ காங் ரோட்டில் உள்ள கிறிஸ்துவ வழிபாட்டுத் தலத்தில் நடந்தது.
நன்கொடையாக வழங்கிய ஆடைகளால் டானுக்கும் அவரது கூட்டாளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது தாக்குதலாக மாறியது.
பின்னர் அங்கிருந்த இருவர் சண்டையை நிறுத்தினர்.
இதற்கிடையே, ஈசூனில் உள்ள ஷெங் சியோங் பேரங்காடியில் டான் திருடினார். அந்தக் குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார். இச்சம்பவம் 2023ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி நடந்தது.
டான் 78.40 வெள்ளி மதிப்புள்ள உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களைத் திருடினார்.
தொடர்புடைய செய்திகள்
பேரங்காடியில் பொருள்கள் இருப்பைச் சரிபார்த்தபோது டான் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.