அரசாங்கம் தனது இப்போதைய ஆட்சிக் காலத்தில் சங்கடமான விவகாரங்களைக் கையாள வேண்டிய நிலை ஏற்படும்போது அவற்றை சிங்கப்பூரர்களிடம் தெளிவுபடுத்துவதில் மெதுவாக செயல்படுகிறது அல்லது போதிய அளவுக்கு நேரடியாகச் செயல்படுவதில்லை என்று எதிர்த்தரப்பு தலைவர் பிரித்தம் சிங் புதன்கிழமை தெரிவித்தார்.
பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயிசா கான் நாடாளுமன்றத்தில் 2021ல் பொய் கூறியது தொடர்பிலான பாட்டாளிக் கட்சியின் தாமதத்திற்கான ஓர் அம்சமாக உணர்வுபூர்வ நிலையை உரிமைக் குழு பரிசீலிக்கக்கூட இல்லை என்று குறிப்பிட்ட அவர், அதற்கும் நாடாளுமன்ற முன்னாள் நாயகர் டான் சுவான்-ஜின்னின் தகாத உறவு விவகாரத்தைக் கையாளுவதில் பிரதமர் லீ சியன் லூங் உணர்வுபூர்வ வெளிப்பாடுகளை எப்படி வெளிப்படுத்தினார் என்பதற்கும் வேறுபாடு இருப்பதாக கூறினார்.
போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தொடர்பான ஊழல் புலன்விசாரணை பற்றி பிரதமர் லீ சியன் லூங் அமைச்சுநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதன் பிறகு மன்றத்தில் பேசிய திரு சிங், மூன்று எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிட்டு அவற்றைப் பொறுத்தவரை சிங்கப்பூரர்களுக்கு பதில் சொல்வதில் அரசாங்கம் நேரடியாக நடந்துகொள்ளவில்லை என்றார்.
ரிடவுட் ரோடு பங்களா விவகாரம், அமைச்சர் ஈஸ்வரன் கைதான விவகாரம், டிரேஸ்டுகெதர் தகவல்களைக் குற்றவியல் புலன்விசாரணைகளுக்குப் பயன்படுத்தும் விவகாரம் ஆகியவற்றை அவர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்.
நியதிகள் தொடர்பில் ஆலோசனை கூறும் ஒருவரை அரசாங்கம் நியமிக்கலாம் என்று தான் தெரிவித்த யோசனையை அவர் மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.