பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தால் கொண்டுவரப்பட்ட கட்டொழுங்கு விசாரணையை எதிர்நோக்குகிறார்.
உதவிப் பதிவாளர் ஜேம்ஸ் லோவின் முன்னிலையில் வியாழக்கிழமை (மார்ச் 12) தனிப்பட்ட முறையில் வழக்கு நிர்வாக விசாரணை திட்டமிடப்பட்டதாகச் சிங்கப்பூர் நீதிமன்ற இணையத்தளத்தின் விசாரணைப் பட்டியல் குறிப்பிடுகிறது.
”சிங்கப்பூர்க் குடியரசின் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கான கட்டொழுங்கு விசாரணை” என்று அந்த வழக்கின் தன்மை குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இணையத்தள விவரங்களின்படி, வழக்கறிஞர் சங்கத்தை ‘ட்ரூ அண்ட் நேப்பியர்’ (Drew & Napier) நிறுவனத்தைச் சேர்ந்த குழுவினர் பிரதிநிதிப்பதாகவும் அதற்கு மூத்த வழக்கறிஞர் கவிண்டர் புல் தலைமையேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
திரு சிங் தமக்காகத் தாமே வாதிடப்போவதாகவும் கூறப்பட்டது. எதிரணித் தலைவராகத் தொடர்வதற்குத் திரு சிங் தகுதியற்றவர் என இவ்வாண்டு (2026) ஜனவரி 14ஆம் தேதி நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியதை அடுத்து இந்தக் கட்டொழுங்கு விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

