கட்டொழுங்கு விசாரணையை எதிர்நோக்குகிறார் பிரித்தம் சிங்

கட்டொழுங்கு விசாரணையை எதிர்நோக்குகிறார் பிரித்தம் சிங்

2 mins read
4824630c-5b95-48a9-abde-ed9649b5c99b
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் தமக்காகத் தாமே வாதிடப்போவதாகக் கூறப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தால் கொண்டுவரப்பட்ட கட்டொழுங்கு விசாரணையை எதிர்நோக்குகிறார்.

நீதிமன்ற உதவிப் பதிவாளர் ஜேம்ஸ் லோவின் முன்னிலையில் வியாழக்கிழமை (மார்ச் 12) தனிப்பட்ட முறையில் வழக்கு நிர்வாக விசாரணை திட்டமிடப்பட்டதாகச் சிங்கப்பூர் நீதிமன்ற இணையத்தளத்தின் விசாரணைப் பட்டியல் குறிப்பிடுகிறது.

‘சிங்கப்பூர்க் குடியரசின் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கான கட்டொழுங்கு விசாரணை’ என்று அந்த வழக்கின் தன்மை குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இணையத்தள விவரங்களின்படி, வழக்கறிஞர் சங்கத்தை ‘ட்ரூ அண்ட் நேப்பியர்’ (Drew & Napier) நிறுவனத்தைச் சேர்ந்த குழுவினர் பிரதிநிதிப்பதாகவும் அதற்கு மூத்த வழக்கறிஞர் கவிண்டர் புல் தலைமையேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வழக்குக்கு ஒதுக்கப்பட்ட எண்ணை வைத்து பார்க்கையில், ஒழுங்கு நடவடிக்கைகளில் மிக உயர்ந்த அமைப்பான மூன்று நீதிபதிகள் கொண்ட நீதிமன்றத்தால் வழக்கு விசாரிக்கப்படும் என்பதைக் குறிக்கிறது. இது தவறு செய்யும் வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்யலாம் அல்லது பட்டியலில் இருந்து நீக்கலாம்.

திரு சிங் தமக்காகத் தாமே வாதிடப்போவதாகவும் கூறப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்வதற்குத் திரு சிங் தகுதியற்றவர் என இவ்வாண்டு (2026) ஜனவரி 14ஆம் தேதி நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியதை அடுத்து இந்தக் கட்டொழுங்கு விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஜனவரி 15 அன்று பிரதமர் லாரன்ஸ் வோங்கால் திரு சிங் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து முறையாக நீக்கப்பட்டார்.

பின்னர் நாடாளுமன்றத்தில் அவருக்காக ஒரு புதிய இருக்கை ஒதுக்கப்பட்டது. அதன்படி, அவர் பிரதமர் வோங்கிற்கு நேர் எதிரே அமரமாட்டார்.

சிறப்புரிமைக் குழுவிடம் பொய்யுரைத்ததாகக் கூறப்படும் இரண்டு குற்றச்சாட்டுகளில் திரு சிங் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து திரு சிங்கை நீக்குவதற்கான தீர்மானம் பிப்ரவரி 2025ல் கொண்டு வரப்பட்டது.

டிசம்பர் 2025ல், திரு சிங் தனது தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தோல்வியடைந்தார். மேலும் அவருக்குத் தனக்கு விதிக்கப்பட்ட $14,000 அபராதத்தையும் செலுத்தினார்.

வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நடைமுறைகளைப் பட்டியலிடும் சட்ட அமைச்சின் இணையத்தளத்தில் திரு சிங்கின் பெயரை வெள்ளிக்கிழமை (மார்ச் 13) காலை சேனல் நியூஸ் ஏஷியா தேடியபோதும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்