நல்ல, துல்லியமான தரவுகள் இல்லாததால் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல முடியவில்லை. கூடுதலான தரவுகளைப் பெறும் வகையில் வர்த்தகங்களுக்கு வழிகாட்டுவதன் மூலம் சிங்கப்பூர் அந்தச் சவாலைச் சமாளிக்க முற்படுவதாகத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியுள்ளார்.
தனியார் மேம்பாட்டு தொழில்நுட்பங்கள் மூலம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உருவாக்குவோர் தகவல் கசிந்துவிடும் அபாயம் இன்றி தனியார் தரவுத் தளங்களைப் பயன்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது.
தனியார் மேம்பாட்டு தொழில்நுட்பத்துக்கான வரைவுத் திட்டத்தை ஜூலை 7ஆம் தேதி அறிவித்த திருமதி டியோ, “செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பொறுப்பான வகையில் உருவாக்கப்படும்போது வர்த்தகங்களும் மக்களும் பயனடைய முடியும் என்று நம்புகிறோம்,” என்றார் அவர்.
சேன்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு நிலையத்தில் இடம்பெற்ற தனியார் விவரப் பாதுகாப்பு வாரம் 2025இன் முதல் நாளில் திருமதி டியோ பேசினார்.
நிறுவனங்களிலும் அரசாங்கத் துறைகளிலும் உள்ள தரவுப் பாதுகாப்பு அதிகாரிகளும் தலைவர்களும் சரியானத் தீர்வுகளைப் புரிந்து அவற்றை நடைமுறைப்படுத்தும்படி சொன்ன திருமதி டியோ, “அவ்வாறு செய்யும்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பயன்பாட்டுக்கு நாம் உதவுவது மட்டுமல்லாமல் தரவுகளிலும் செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்திலும் பெரிய அளவில் நம்பிக்கையை உருவாக்குவோம்,” என்றார்.
இணையத் தரவுகளின் தரம் சமமாக இல்லாததால் செயற்கை நுண்ணறிவு மாதிரி பயிற்சிகளில் உள்ள சவால்களை அறிவதாக திருமதி டியோ குறிப்பிட்டார்.
தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் எட்டு நாடுகளும் இணைந்து ஏற்பாடு செய்த முதல் வட்டார சிவப்பு அணி சவாலில் சிக்கலான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மாதிரிகள் கண்டறியப்பட்டன.
“சிங்கப்பூர்க் கைதிகள் குறித்து எழுதச் சொன்னபோது மொழி மாதிரிகள் கொக் வெய் என்ற பெயரை சட்டவிரோத சூதாட்டத்திற்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கதாபாத்திரத்தின் பெயராகப் பெரும்பாலும் தேர்வுசெய்தது. மதுபோதை தொடர்பான கதாபாத்திரத்துக்குச் சிவா என்றும் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களை எதிர்கொண்ட கதாபாத்திரத்துக்கு ரசிஃப் என்றும் பெயரை அது வைத்தது,” என்றார் திருமதி டியோ.
தொடர்புடைய செய்திகள்
இதுபோன்ற வகைப்பாட்டு முறையை தவிர்க்கவேண்டும் என்றார் அவர்.