எதிரணி ஆட்டக்காரர்கள் இருவரைத் தாக்கிய வழக்கில் தஞ்சோங் பகார் யுனைடெட் அணியின் முன்னாள் ஆட்டக்காரருக்கு 15 மாத நன்னடத்தை கண்காணிப்பு விதிக்கப்பட்டுள்ளது.
எதிரணியினரைத் தாக்கிய சம்பவத்தில் ரிஸ்கின் அனிக் ரஹாய்ஸாட், 20 நவம்பர் 25ஆம் தேதி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) அவருக்கு நன்னடத்தைக் கண்காணிப்பு விதிக்கப்பட்டது.
அவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் இந்தத் தண்டனையின்கீழ் ரிஸ்கின், அன்றாடம் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணிவரை வீட்டிலேயே இருக்க வேண்டும். மேலும், 70 மணி நேரம் அவர் சமூக சேவையாற்ற வேண்டும்.
கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி இரவு, சிங்கப்பூர் பிரிமியர் லீக்கின் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான காற்பந்துப் போட்டி ஜூரோங் ஈஸ்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
அதில் தஞ்சோங் பகார் யுனைடெட் அணியும் அல்பிரெக்ஸ் நிகாட்டா அணியும் மோதின. அந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணிகளுக்கும் இடையே பதற்றம் நிலவ, ஒரு கட்டத்தில் தமது அணியில் உள்ள ஒருவரை அல்பிரெக்ஸ் அணியின் 17 வயது ஆட்டக்காரர் கேலி செய்ததாகக் கேள்விப்பட்டார் ரிஸ்கின்.
மேலும், ஆட்டம் முடிந்து இரு அணியினரும் கைகுலுக்கும் வேளையில் எதிரணியின் விளையாட்டாளர்கள் இருவரை ரிஸ்கின் தாக்கினார்.
அன்றிரவு 9.45 மணிவாக்கில், ரசிகர்கள் ஏறத்தாழ 200 பேர் முன்னிலையில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதன்தொடர்பில், வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்காக ரிஸ்கின் தண்டிக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கம் ரிஸ்கினுக்கு 30 மாதத் தடை விதித்தது.

